புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் இல்லை! - மகிந்த அமரவீர
இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இறக்குமதி செய்யப்படவிருந்த வாகனங்கள், அவர்களின் உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காக அல்ல, அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவே இறக்குமதி செய்யப்படவிருந்ததாகச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், நாட்டின் அனைத்து துறைகளிலும் பொருளாதார நிலைமை சீராக இல்லை. இதனை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
சுற்றுலாத் துறை வீழ்ச்சியடைந்துள்ளது. வெளிநாட்டவர்களிடமிருந்து பணம் அனுப்புவது குறைவாக உள்ளது. இலங்கையில் பல வணிக நடவடிக்கைகள் சரியாகச் செயல்படவில்லை. பலரின் அன்றாட வாழ்க்கை ஒரு கேள்விக்குறியாக மாறியுள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையில், வாகன இறக்குமதி பொருத்தமானது என்று தாம் நினைக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களுக்கான தேவை எழுந்துள்ளது.
நாடாளுமன்றத்திற்குச் செல்வதற்கு அவர்களுக்குப் போக்குவரத்து கூட இல்லை. எனவே வாகனங்களுக்கான கோரிக்கை அவர்களால் விடுக்கப்பட்டிருக்கலாம். உண்மையில், அது பற்றி தனக்கு தெரியாது.எனினும் வாகனம் உள்ளவர்களும் வாகனங்கள் கேட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இருப்பினும்,தமக்கு வாகனம் தேவையா என்று யாரும் கேட்கவில்லை. தனிப்பட்ட
முறையில், தம்மிடம் அதிகாரப்பூர்வ வாகனம் இல்லை, ஆனால் நாடாளுமன்ற
உறுப்பினராக இருப்பதால் உத்தியோகபூர்வ தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய
நான்கு முதல் ஐந்து வருட சேவையைக்கொண்ட வாகனம் உள்ளது.. அந்த வாகனம் தமக்கு
போதுமானது என்று மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.