கடன்களை மீளப்பெறும் போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறைக்கவும் - மகிந்த ராஜபக்ச
கோவிட் -19 தொற்று நிலைமைக்கு மத்தியில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ள மக்களின் கடன்களை மீளப்பெறும் போது அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளைக் குறைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மகிந்த ராஜபக்ச, மத்திய வங்கி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து மத்திய வங்கி அதிகாரிகளுடன் இன்று (16) அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவது தொடர்பில் இதன்போது மத்திய வங்கி பிரதிநிதிகள் பிரதமருக்கு விளக்கமளித்துள்ளனர்.
இவ்வாறான தொற்று நிலைமைக்கு மத்தியில் நிதிக் கடன்களைப் பெற்றுக்கொண்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்கள் விசேட கவனம் செலுத்தியுள்ளார்.
எனவே கடன்களை மீளப்பெறும் போது கடன்களைப் பெற்றுக்கொண்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு பிரதமர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தவணை கட்டணங்களைச் செலுத்தும் போது வட்டி தொகையை முதலில் செலுத்த வேண்டியிருப்பதால் கடனை திரும்பச் செலுத்த முடியாத நிலைக்குக் கடனாளிகள் தள்ளப்பட்டுள்ளதுடன், வட்டி மற்றும் கடன் தொகையைச் செலுத்துவதற்கான முறையில் மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பிலும் இதன்போது பிரதமர் கவனம் செலுத்தியுள்ளார்.
குறித்த சந்திப்பில் நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி
மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், பிரதமரின்
செயலாளர் காமினி செனரத், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித
ராஜபக்ச, மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளிவ்.டீ.லக்ஷ்மன், மத்திய
வங்கியின் துணை ஆளுநர்களான கே.எம்.எம்.சிறிவர்தன,
எம்.டப்ளிவ்.ஜீ.ஆர்.டீ.நாணாயக்கார, மத்திய வங்கியின் உதவி ஆளுநர்களான
ஜே.பீ.ஆர்.கருணாரத்ன, ஏ.ஏ.எம்.தாஸீம், பொருளாதார மற்றும் ஆராய்ச்சி பணிப்பாளர்
சீ.அமரசேகர, வங்கி அல்லாத நிதி நிறுவன ஆராய்ச்சி பணிப்பாளர் சமன் நாணாயக்கார
உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.