பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் இலங்கை நாடாளுமன்றமே தீர்மானிக்கும் - சரத் வீரசேகர
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் இலங்கை நாடாளுமன்றமே தீர்மானிக்கும் எனவும், மாறாக அதனை வேறு எவருமே தீர்மானிக்க முடியாது எனவும் இலங்கை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடன் இரத்துச் செய்ய வேண்டுமென வலியுறுத்துவதற்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் பல்வேறு மனித உரிமை செயற்பாட்டாளர்களாலும், சர்வதேச அளவிலும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் கடந்த வாரம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருந்தது.
இல்லாவிடின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இரத்துச் செய்யப்படக் கூடிய நிலைமை ஏற்படும் எனவும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், இலங்கை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இதுத் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடனேயே பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறையிலுள்ளதாகவும், அதை நீக்குவதா அல்லது இல்லையா என்பதை இலங்கை நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும்.
அது தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் எதுவும் மேற்கொள்ள முடியாது. நாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறையில் இருக்கின்ற காரணத்தினாலேயே பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களையும் அதற்குத் துணை போனவர்களையும் கைது செய்ய முடியும்.
இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமெனச் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் இணைந்து ஐரோப்பிய நாடாளுமன்றம் வலியுறுத்துவது மனிதாபிமானமற்ற ஒரு செயல் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பந்தப்பட்ட தரப்புகள், இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை விலக்கிக் கொள்ள மாட்டார்கள் எனத் தான் நம்புவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்று கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. ஸ்பெயின், ரஷ்யாவிலுள்ள மொராக்கோ எல்லை மற்றும் இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் மூன்று தீர்மானங்களை முன்வைத்தது.
இதில் இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக்கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக 628 வாக்குகள் பதிவாகியதோடு, எதிராக 15 வாக்குகள் பதிவாகியிருந்தன. 40 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இலங்கையில் இடம்பெற்ற மிக சமீபத்திய மனித உரிமை மீறல்கள் மற்றும் நாட்டில் காணப்படும் ஆபத்தான போக்குகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துவதாகத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கடும் எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தச் சட்டம் சந்தேக நபர்களை ஆதாரங்கள் இன்றி கைது செய்யவும், தடுத்து வைக்கவும் பொலிஸாருக்கு பரந்த அதிகாரங்களை வழங்குகிறது. இது சித்திரவதை, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் கட்டாய ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்கான வழியாக உள்ளது எனவும் தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது.
தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை மீள்பரிசீலனை செய்வதுடன்,
இரத்துச் செய்வதற்கான உறுதி மொழியை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற நிபந்தனையில் அடிப்படையிலேயே
இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை 2017 மே 19 முதல் இலங்கைக்கு மீண்டும்
வழங்கப்பட்டதையும் தீர்மானம் நினைவுகூர்ந்துள்ளது.