முஸ்லிம் கட்சிகள் அதன் தலைவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை - இம்ரான் எம்.பி தெரிவிப்பு
முஸ்லிம் கட்சிகள் அதன் தலைவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்.
துறைமுக நகர சட்டமூலத்துக்கான வாக்கெடுப்பு தொடர்பில் ஊடகங்களிடம் இன்று கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இன்று காணப்படும் பிரதான இரண்டு முஸ்லிம் கட்சிகளும் அதன் தலைவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. அது ராஜபக்சகளின் கட்டுப்பாட்டில் உள்ளமை இருபதாம் திருத்தம் மற்றும் துறைமுக நகர சட்ட மூல வாக்கெடுப்பின் மூலம் தெளிவாகிறது.
இருபதாம் திருத்த சட்ட மூலத்தில் தலைவர் எதிராகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும் வாக்களித்தனர்.
அதன்பின் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இனி அவர்கள் கட்சியின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் துறைமுக நகர சட்ட மூலத்தில் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் ராஜபக்சக்களின் காட்டுப்பாட்டில்லையே உள்ளனர் என்பது புலனாகியது.
அதுவும் இந்த சட்டமூல விவாதத்தில் இதற்கு எதிராகப் பேசிய முஸ்லிம் காங்கிரஸ்
தலைவர் ரவூப் ஹக்கீமை இவர்கள் வாக்களிக்காமல் தடுத்துள்ளனர்.
காரணம் இவர்களால் ராஜபக்சக்களுக்கு எதிராக வாக்களிக்க முடியாது. எனவே எதிராக வாக்களிக்க இருந்த தலைவரையும் வாக்களிக்காமல் தடுத்து இவர்கள் மக்களிடமும் ராஜாபக்சக்களிடமும் தப்ப முயல்கின்றனர்.
அடுத்த பக்கம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் அநியாயமாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தும் கூட அக்கட்சியின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
தமது தலைவரைச் சிறையில் அடைத்த அரசை எதிர்த்து வாக்களிக்க
முடியவில்லை.
ஆகவே இவர்கள் அனைவரும் தற்போது ராஜபக்சக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால்
இவர்களால் அரசை எதிர்த்து ஒன்றும் பேச முடியாது எனத் தெரிவித்துள்ளார்.