உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பில் புதிய தகவலை தெரிவித்துள்ள! ஹரீன்
ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் முதலாவதாகக் கைது செய்யப்பட்ட குற்றப்புலனாய்வு அதிகாரியை விசாரிக்கும்போது, அவரை இராணுவத்தின் புலனாய்வு பிரிவு அழைத்துச் சென்றதாகக் குற்றப்புலனாய்வு பிரிவு முன்னாள் பிரதானி ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவுக்குத் தெரிவித்த சாட்சியங்கள் ஆணைக்குழுவின் அறிக்கையில் மறைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அரசாங்கம் விசாரணை மேற்கொண்டு வந்த குற்றப்புலனாய்வு அதிகாரிகளை இடம் மாற்றியிருப்பது குற்றவாளிகளை மறைக்கும் திட்டமாகும் என ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஏப்ரல் தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரியான ஷானி அபேசேகர, குறித்த விசாரணையை மேற்கொள்ளும்போது முதலாவதாகக் கண்டுபிடித்திருப்பது புலனாய்வு அதிகாரி ஒருவரையாகும். தொலைபேசி ஐ.பி.முகவரி மூலமே அவர் கண்டுபிடிக்கப்படுகின்றார்.
இந்த நபரை விசாரணைக்கு அழைத்து விசாரிக்கும் போது இராணுவத்தின் புலனாய்வு பிரிவு, இவரை எமது பிரிவில் விசாரிப்பதாகத் தெரிவித்து, அழைத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த விடயங்கள் அறிக்கையில் இல்லை. மேலும், ஏப்ரல் தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த குற்றப்புலனாய்வு அதிகாரிகள் 14 பேர் இடமாற்றப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று சில தினங்களிலேயே ஷானி அபேசேகர சாதாரண அதிகாரியாக வேறு பிரதேசம் ஒன்றுக்கு இடமாற்றப்பட்டார். அதன் பின்னர் அவரை சிறையில் அடைத்தார்கள். அத்துடன் மாத்தளை சஹ்ரான் என்ற நபர் அன்று குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
ஆனால் பிரதான சூத்திரதாரி என அரசாங்கம் தெரிவுசெய்திருக்கும் நெளபர் மெளலவி மற்றும் மாத்தளை சஹ்ரான் ஆகிய இரண்டுபேரிடம் வாக்கு மூலம் பெறாமல் அரசாங்கம் எதனை மறைக்கப்போகின்றது.
ஆணைக்குழுவுக்குத் தெரிவிக்கப்பட்ட பல வாக்குமூலங்கள் அறிக்கையில் வரவில்லை. மேலும், அரசாங்கம் ஏப்ரல் தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப் போலி விசாரணைக்குழு அமைத்து, புதிதாகக் குற்றப்புலனாய்வு அதிகாரிகளை நியமித்திருப்பது இந்த விசாரணையை மறைக்கும் திட்டமாகும். அதேபோன்று தாக்குதல் தொடர்பாக முதலாவது தகவல் வழங்குவது ஏப்ரல் 4ஆம் திகதியாகும்.
அதன் பின்னர் அந்த நபர் இரண்டாவது தகவல் வழங்குவது ஏப்ரல் 20 ஆம் திகதியாகும். அப்படியானால் தகவல் வழங்கிய நபர் எங்கே இருந்தார். அவரை யார் பாதுகாத்து வந்தார்.? அதனால் குற்றப்புலனாய்வு துறையை நிர்வகிப்பது அரசாங்கத்துக்குத் தேவையான ஒரு தனி நபராகும்.
அந்த நபர்தான் இரண்டு தினங்களுக்கு முன்னர் சட்டமா அதிபர் திணைக்களத்துக்குச் சென்றிருந்தார். தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் சட்டமா அதிபர் திணைக்களத்துக்குச் செல்லாமல் ஜனாதிபதியின் பிரதிநிதி ஒருவரே செல்கின்றார்.
அப்படியானால் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதைத் தேடிக்கொள்ளத் தேவை என்றால் சட்டமா அதிபர் திணைக்களத்துக்குச் சென்றவரே இதன் பிரதான சூத்திரதாரியாவார். மேலும், சாரா எங்கே இருக்கின்றார். அவரை யார் அழைத்துச்சென்றார் என்பது தொடர்பான அனைத்தையும் வெளிப்படுத்துவோம்.
முடியுமானால் இவற்றுக்கு அரசாங்கம் பதில் சொல்லவேண்டும். நெளபர் மெளவி மீது குற்றத்தைச் சுமத்தி கொலையாளிகளை மறைக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என தெரிவித்துள்ளார்.

எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை News Lankasri
