துறைமுக நகரம் பணமோசடி நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக மாறும்! - விஜயதாச ராஜபக்ச
கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைய யோசனை நடைமுறைக்கு வந்தவுடன், கொழும்பு துறைமுக நகரம் பணமோசடி நடவடிக்கைகளுக்குப் பாதுகாப்பான புகலிடமாக மாறும் என்று முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைய யோசனையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தனது வாய்வழி சமர்ப்பிப்பை இன்று மேற்கொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
இந்த யோசனை இலங்கையின் வளர்ச்சிக்காக அல்ல, அது குறிப்பிட்ட மண்டலத்தின் அபிவிருத்திக்கு மட்டுமே உதவும். எதிர்காலத்தில் ஒரு தனி மாநிலமாக நிர்வகிக்கப்படும்.
இந்த யோசனையின் மூலம் புதிய சட்டமன்ற ஆட்சி, வரி விலக்கு மற்றும் ஒரு வெளிநாட்டு நிதி மையமாக இருக்க அனுமதி கிடைக்கும். இது பணமோசடி நடவடிக்கைகளுக்குப் பாதுகாப்பான புகலிடமாக இருக்கும்.
கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தைச் செயற்படுத்தும் சீன நிறுவனத்தை அமெரிக்கா ஏற்கனவே தடுப்புப்பட்டியலில் பதிவு செய்துள்ளது. எனவே இந்த நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் முழு திட்டமும் நாட்டின் கடனை இரட்டிப்பாக்கும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.
யோசனையின்படி குறித்த நிலப்பகுதியில் இலங்கை நாணயத்திற்குத் தடை விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இது நாடாளுமன்றத்தின் மேலாதிக்கத்தைத் தன்னிச்சையாக மீறுவதும் நாட்டின்
அரசியலமைப்பை மீறுவதும் ஆகும் என்றும் அவர் கூறினார்.