வலுக்கும் அரசியல் கைதிகள் போராட்டம்! உயரிய சபையிலும் சூடான விவாதம்
இலங்கை சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த விடயமானது தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்யப்படும் விடயமாக காணப்படுகின்ற நிலையில், கொரோனா தொற்று அச்சத்துடன் இந்த விடயம் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள், கலந்துரையாடல்கள், போராட்டங்கள், மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்கள், கையளிக்கப்பட்ட மனுக்கள் அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைக் கடிதங்கள் எண்ணிலடங்காதவை.
எனினும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன.
இவ்வாறான ஒரு சூழலில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தமிழர் தாயக பிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 5ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்கள், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களின் ஏற்பாட்டில் யாழில் இடம்பெற்ற போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா காமினி மகாவித்தியாலத்திற்கு முன்பாக இடம்பெற்ற மற்றுமொரு கவனயீர்ப்பு போராட்டம், நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
கொரோனா பெருந்தொற்றின் அபாயத்திலிருந்து தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களைப் பாதுகாப்பதன் நிமித்தம் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர் மற்றும் முருங்கன் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை பெண்கள் வாழ்வுரிமை கழகத்தின் ஏற்பாட்டில் மாங்குளம் நகர் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற போராட்டத்தில் பொங்கல் பரிசாக அரசியல் கைதிகளை ஜனாதிபதி விடுதலை செய்ய வேண்டும் எனவும் பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
இதேவேளை கிழக்கு இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்திலும், அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பகுதியிலும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தின் நிறைவில் மகஜரை திருக்கோவில் பிரதேச செயலாளரிடம் கையளிக்கும் போது காவல்துறையினர் குழப்பம் ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டு உடல் மற்றும் மன நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் பல அரசாங்கங்கள் கவனம் செலுத்தத் தவறியது குறித்து வடக்கில் உள்ள செயற்பாட்டாளர்கள் ஆழ்ந்த கவலை வெளியிட்டிருந்தனர்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் காலம் தாழ்த்தாது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு 15 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாகக் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தனர்.
எதிர்த்தரப்பு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம், குறித்த உறுப்பினர்களால் தன்னிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்திருந்தார்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ள வேண்டுகோள் தொடர்பில் ஜனாதிபதி, நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருடன் நேரில் பேசி தீர்க்கமான முடிவொன்று விரைவில் எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 6ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய, எம்.ஏ.சுமந்திரன் சிறைகளில் நீண்டகாலமாக வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை தொடர்பில் வலியுறுத்தினார்.
இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுதலை செய்யப்படுவார்களாயின் அவர்களுக்கு பிணையாளர்களாக முன்னிலையாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கடந்த 5ஆம் திகதி தெரிவித்திருந்தார்.
எவ்வாறெனினும், அரசியல் கைதிகள் என யாரும் இல்லையெனவும், மாறாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாத சந்தேகநபர்களே சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில குறிப்பிட்டிருந்தார்.
தமிழர் என்ற அடிப்படையில் யாரும் அரசியல் கைதிகளாக கைது செய்யப்படவில்லை எனவும், மாறாக பயங்கரவாத நடவடிக்கைகள், போதைப்பொருள் பாவனை மற்றும் பிற குற்றங்களில் ஈடுபடுவோர் வெவ்வேறு சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக வைக்கப்பட்டிருப்பதாக அவர் வலியுறுத்தியிருந்தார்.
இந்தக் கருத்தானது, தமிழர்களையும் அரசியல் கைதிகளையும் புண்படுத்தும் ஒரு கூற்று எனவும், இதனை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வன்மையாக கண்டிப்பதாகவும் அந்த அமைப்பின் ஏற்பாட்டாளரான அருட்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறான கருத்துகள், வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றாலும், அரசாங்கத்தின் தீர்மானத்திலேயே அரசியல் கைதிகளின் விடுதலை தங்கியுள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.