பௌத்த பிக்குகளை தாக்கிய பொலிஸார் தொடர்பில் முறைப்பாடு
திருகோணமலை சம்பவத்தில் பௌத்த பிக்குகளை தாக்கிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பொலிஸ் குழுவினரை உடனடியாகக் கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபரிடம் இன்று (20.11.2025) எழுத்துப்பூர்வ முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
"ஜன அரகலயே புரவசியோ" (மக்கள் போராட்டத்தின் குடிமக்கள்) அமைப்பினால் குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பப்பட்ட இந்தக் கடிதத்தில், கடந்த 16ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பில் பாரிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று விகாரையின் கம்பி வேலியைத் துண்டித்து அதற்குள் பலவந்தமாக நுழைந்துள்ளதுடன்,பௌத்த பிக்குகளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அளவுக்குத் தாக்கிவிட்டு புத்தர் சிலை ஒன்றையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

தண்டனை சட்டக்கோவை
இந்தச் செயலானது, 1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் சட்டக்கோவை மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் சில பிரிவுகளை மீறும் செயல் எனவும், இது பிடியாணை இன்றி கைது செய்யக்கூடிய குற்றம் எனவும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டின் பிரதிகள், பொலிஸ் ஆணைக்குழு உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.