சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவருமாறு மட்டக்களப்பு பொலிஸார் எச்சரிக்கை
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தினை இன்று காலைக்குள் முடிவுக்கு கொண்டுவருவமாறு மட்டக்களப்பு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்திடம் நீதி கோரி வடக்கு - கிழக்கின் பல பகுதிகளில் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் கடந்த புதன்கிழமை ஆரம்பமான போராட்டம் ஐந்தாவது நாளாக நேற்றும் தொடர்ந்துள்ளது.
நேற்று பிற்பகல் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு பொலிஸார் சிலரின் பெயரை வாசித்து அவர்களுக்கு தடையுத்தரவு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எனினும் அவர்கள் குறிப்பிட்ட பெயரில் அங்கு யாரும் இல்லையென தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த பகுதியில் போராட்டம் நடத்த முடியாது, அங்கிருந்து இன்று காலை 9 மணிக்கு முன்னர் வெளியேறிச் செல்லுமாறு பொலிஸாரினால் பணிக்கப்பட்டதாக போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுகாதார நடைமுறைகளைப் பேணி மிகவும் அமைதியான முறையில் போராட்டம் மேற்கொண்டுவரும் மக்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸ் உத்தியோகத்தர் நடந்து கொண்டதாக அருட்தந்தை க.ஜெகதாஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களை அவர் கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுத்ததாகவும், பெண்களின் அனுமதியின்றி குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் இவ்வாறு செயற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இன்று நீதிமன்ற உத்தரவுடன் வருவதாகவும் காலை 9 மணிக்கு முன்பாக அங்கிருந்து சென்றுவிட வேண்டும் என அச்சுறுத்தும் பாணியில் தெரிவித்தாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.சிவயோகநாதன் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், மண்முனை மேற்கு பிரதேசசபை தவிசாளர் சண்முகராஜா, மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் நா.புஸ்பலிங்கம் மற்றும் மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் பிரதிதவிசாளர், பிரதேசசபை உறுப்பினர்கள், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.







பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
