மேல் மாகாண மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
மேல் மாகாண புலனாய்வு பிரிவு அதிகாரிகள் போன்று வேடமிட்டு பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 4 பேர் மொரகஹஹேன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த நபர்கள் தொடர்பில் சந்தேகித்த பிரதேச மக்கள் அவர்களை தடுத்து வைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள், சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் அவ்வாறான சட்டவிரோத செயல்கள் மேற்கொள்ளும் நபர்களை தேடுவதாக கூறி வீடுகளுக்குள் நுழைந்துள்ளனர்.
வீட்டில் உள்ளவர்களிடம் பலவந்தமாக பணம் கொள்ளையடிக்கும் நடவடிக்கையில் இந்த நபர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மொரகஹஹேன பொலிஸ் பிரிவின் வெல்மில்ல மற்றும் அதற்கு அருகில் உள்ள இடங்கள் பலவற்றிற்கு சென்று பணம் கொள்ளையடிக்கும் நடவடிக்கைகளில் இந்த நபர்கள் ஈடுபட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்கள் பிலியந்தலை, கல்கிஸ்ஸ, கட்டுபெத்த மற்றும் பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நபர்கள் மேல் மாகாணத்தில் அதிக அளவில் சுற்றி திரிவதனால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.