மட்டக்களப்பில் போராட்டத்தை முடக்கும் முயற்சியில் பொலீசார்! கண்டு கொள்ளாத பாராளுமன்ற உறுப்பினர்கள்?
வடகிழக்கு மாகாணங்களில் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துமாறு கோரி நடைபெற்று வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முடக்குவதற்கு பொலீசார் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக களத்தில் இறங்கி போராடுவோம் என கூறி தமிழ் மக்களிடம் வாக்குகளை பெற்ற தமிழ் தேசியக் கட்சிகளில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராமுகமாக இருப்பது தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் நடைபெறும் உண்ணாவிரதப் பந்தலை பொலீசார் இரவோடு இரவாக அகற்றி உள்ள நிலையில் போராட்ட காரர்கள் வீதி ஓரத்தில் பாயை விரித்து நடு வெயிலில் இருந்து போராடி வருகின்றனர்.
இவர்கள் எந்த சுய இலாபம் இன்றி பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் குரலாக போராடி வரும் நிலையில் அவர்களுக்கு எதிராக பொலிசாரினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை தடுக்காது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கட்சிகளின் செயற்பாட்டு அரசியல் தேர்தல் காலங்களில் மாத்திரமே இடம் பெறுவதாக கூறப்படுகிறது.
இன் நிலையில் பாதிக்கப்பட்ட சமூகம் சார்பாக பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தினால் நடாத்தப்படும் அகிம்சை முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் சமூகம் உரத்து குரல் கொடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.