நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டது! - பொலிஸார் அறிவிப்பு
கொழும்பு - மிரிஹான பகுதியில் உள்ள ஜனாதிபதியின் வீடு முற்றுகையிடப்பட்டு பெரும் போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொரிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், எரிபொருள், எரிவாயு, அத்தியாவசியப் பொருட்கள், மருந்து பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
டொலரின் பெறுமதி சடுதியாக உயர்ந்துள்ள நிலையில், பொருட்களின் விலைவாசியும் பல மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாள் ஒன்றுக்கு 10 மணி நேரத்திற்கும் மேலக மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இவ்வாறான நிலையிலேயே, ஜனாதிபதியின் வீடு இன்று முற்றுகையிடப்பட்டு பெரும் போராட்டம் நடைபெற்றிருந்தது. பேருந்து ஒன்றும் தீவைப்பட்டது. இந்த போராட்டத்தின் போது 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
குறித்த பகுதியில் இராணுவத்தினர், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கொழும்பில் 61 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மிரிஹான பகுதியில் ஏற்பட்டிருந்த பதற்றம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.



