யாழில் கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்ட இடம் பொலிஸாரால் முற்றுகை
யாழ்ப்பாணம் - புதியசெம்மனி வீதிப் பகுதியிலுள்ள வயல்வெளிக்கு நடுவே காட்டுப்பகுதியில் இன்று அதிகாலை கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ். மாவட்ட புலனாய்வு பிரிவும், யாழ். மாவட்ட விஷேட குற்ற தடுப்பு பிரிவும் இணைந்து விசேட சுற்றிவளைப்பினை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது 20 லீற்றர் கசிப்பும், 180 லீற்றர் கோடாவும் பரலுடன் கசிப்புக்கு பயன்படுத்தும் உபகரணங்கள் போன்றவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் அதே இடத்தை சேர்ந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 27ஆம் திகதி யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.