யாழில் நகர சபையின் முன்னாள் உறுப்பினரை கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டிய பொலிஸ் அதிகாரி (VIDEO)
யாழ்ப்பாணம் - கைதடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்ப காத்திருந்த சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு எரிபொருள் பெறுவதற்காக பலர் நீண்ட வரிசைகளில் பல மணி நேரமாக காத்திருந்துள்ளனர்.
இதன்போது , எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸார் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தமக்கு தெரிந்தவர்களுக்கு வரிசை இன்றி எரிபொருள் விநியோகித்துள்ளனர்.
கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டிய அதிகாரி
அதனை அவதானித்த சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் சுதர்சன் உள்ளிட்ட சிலர் அங்கிருந்த பொலிஸார் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களிடம் நியாயம் கேட்டுள்ளனர்.
இதன்போது அங்கு கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நகர சபையின்
முன்னாள் உறுப்பினரை தனது கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.
அதனை அவதானித்த வரிசையில் உள்ள பலரும் அச்சத்திற்கு உள்ளாகி அங்கிருந்து
அகன்று சென்றுள்ளனர்.