மகள் மீதான அத்துமீறல் வழக்கை விரைவுபடுத்த தாயிடம் பாலியல் இலஞ்சம்!
கேகாலை மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கை விரைவாக முடிக்க உதவுவதாகக் கூறி, பாலியல் இலஞ்சம் பெற முயற்சித்ததாக பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
குறித்த வழக்கில் தொடர்புபட்ட பெண்ணை வாரகாபொல பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்றதாகக் அந்தப் பெண் கடந்த (05.01.2026) அளித்த முறைப்பாட்டையடுத்து கேகாலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி வருகிறது.
பொலிஸார் கொடுத்த அழுத்தங்கள்
முறைப்பாடு செய்த பெண்ணின் மகள் மீது 2021 ஆம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் பாலியல் அத்துமீறல் தொடர்பான வழக்கு தற்போது கேகாலை மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது, மேலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பொலிஸ் பரிசோதகர் இந்த வழக்கில் சாட்சியாகச் செயல்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வழக்கை விரைவாக முடிக்க அந்த பெண் பொலிஸ் பரிசோதகரின் உதவியை கோரியுள்ளார். அச்சந்தர்ப்பத்தில் பெண்ணை தனியாக வந்து சந்திக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், அதற்கான தேவையான ஆவணங்களைத் தயாரிப்பதாகவும் கூறியுள்ளார்.
பெண்ணின் கையடக்க தொலைபேசி எண்ணைப் பெற்ற சந்தேக நபரான பொலிஸ் பரிசோதகர், தனியாக சந்திக்க வருமாறு அழுத்தம் கொடுத்துள்ளார்.

அவ்வாறான ஒரு நிலையில் பொலிஸ் பரிசோதகரை சந்திக்க சென்றபோது, அவரை மோட்டார் சைக்கிளில் ஏறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.அந்தப் பெண் ஆரம்பத்தில் மறுத்தாலும், அவரது தொடர்ச்சியான வேண்டுகோளின் பேரில் அவர் அதற்கு ஒப்புக் கொண்டார்.
பின்னர் அவர் அவளை ஒரு ஒஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்றதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.