தெஹிவளைப் பிரதேசத்தில் நள்ளிரவில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது
தெஹிவளைப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நள்ளிரவு வேளையில் அத்துமீறி நுழைந்து சிறுமியொருவரிடம் தகாத முறையில் நடக்க முயன்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு போக்குவரத்துப் பிரிவு பொலிஸில் இருந்து தெஹிவளை பொலிஸ் நிலையத்துக்கு தற்காலிக அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தெஹிவளைப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நள்ளிரவு வேளையில் சிவில் உடையில் அத்துமீறி நுழைந்து, வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த 13 வயதுச் சிறுமியொருவரிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு திரண்டு வந்த அயலவர்கள், பொலிஸ் உத்தியோகத்தரை நையப்புடைத்து பொலிஸ் ரோந்துப் பிரிவினரிடம் கையளித்துள்ளனர்.
அதன்போது, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் என்பது தெரிய வந்துள்ளது.
அதனையடுத்து, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



