கொழும்பில் வசிக்கும் தற்காலிக குடியிருப்பாளர்ளுக்கான அவசர அறிவித்தல்!
கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் தங்கியிருக்கும் அனைத்து தற்காலிக குடியிருப்பாளர்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் வேலைத்திட்டம் ஒன்று பொலிஸாரால் முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நிரந்தர குடியிருப்பாளர்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள், நிறுவனங்கள், அரசு அல்லது தனியார் வளாகங்கள், கட்டுமான ஸ்தளங்கள் போன்றவற்றில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்கள் பற்றிய தகவல்கள் இதன்போது பெறப்பட உள்ளன.
நாளை மற்றும் 15 , 16 ஆம் திகதிகளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் கொழும்பு நகரில் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல், குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் பாவனையை ஒழித்தல்' என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேலே குறிப்பிட்டுள்ள வீடுகளிலோ அல்லது வேறு இடங்களிலோ தற்காலிகமாக தங்கியிருப்பவர்கள், அவர்கள் வசிக்கும் பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளிடமோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ தமது தகவல்களை வழங்கும் படிவம் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 76ஆவது பிரிவின்படி தயாரிக்கப்பட்ட இந்தப் படிவத்தைப் பெற்று, தாம் குறித்த சரியான தகவல்களை உள்ளீடு செய்து, சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் அல்லது சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
