ஐரோப்பா செல்ல முற்பட்ட நான்கு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
ஐரோப்பிய நாடான போலந்து செல்வதற்கான விசா பெறுவதற்காக இந்தியாவின் புது டில்லிக்கு சென்று திரும்பிய நான்கு இலங்கைப் பயணிகள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோசடியாக தயாரிக்கப்பட்ட போலி விசாக்களுடன் குடிவரவு மற்றும் குடியகல்வுத்துறை அதிகாரிகளால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவர் நீர்கொழும்பை சேர்ந்த 22 வயதுடைய திருமணமான தம்பதி. ஏனைய இருவரில், ஒருவர் கொழும்பு, வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 28 வயதுடையவர், மற்றவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 45 வயதுடையவராகும்.
போலந்து தூதரகம்
போலந்துக்கு சட்டப்பூர்வமாகச் செல்வதற்குத் தேவையான விசாக்களைப் பெறுவதற்காக, நால்வரும் தரகர்களிடம் 6.4 மில்லியன் ரூபாய் செலுத்தி, பின்னர் விசாக்களை பெறுவதற்காக இந்தியாவின் புது டில்லியில் உள்ள போலந்து தூதரகத்திற்கு சென்றுள்ளனர்.

இன்று காலை 06.00 மணிக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL-196 விமானம் மூலம் இந்தியாவின் புது டில்லியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இதன்போது விசாக்கள் விமான நிலைய குடியேற்ற கவுண்டரில் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டன, இதன்போது எழுந்த சந்தேகத்தின் பேரில், அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டன.
அங்கு மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப சோதனைகளின் போது, இந்த விசாக்கள் போலியானவை என்பது உறுதி செய்யப்பட்டது.
அதிகாரிகளால் கைது செய்யப்படும் வரையில் அவர்கள் போலியான விசாவுடன் உள்ளமை சந்தேக நபர்களுக்கு தெரிந்திருக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam