வட்டம் புழுவால் கோவிட் தொற்றை விட பாரிய தாக்கம்: அ.ரமேஸ் (video)
இலங்கையிலேயே கடந்த ஆட்சியாளர்கள் அறிமுகப்படுத்திய சேதன உரத்தால் வட்டம் புழு எனப்படும் நிமற்றோடாக் பரவியுள்ளதாக கமநல அமைப்புக்களின் மட்டக்களப்பு மாவட்ட அதிகார சபை தலைவர் அ.ரமேஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையானது கோவிட் நோய் தொற்றை விட பாரிய தாக்கத்தை இலங்கையில் ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று (17.01.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், அண்மைக்காலமாக விவசாயிகள் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.
இலங்கையிலேயே கடந்த ஆட்சியாளர்கள் அறிமுகப்படுத்திய சேதன உரத்தால் வட்டம் புழு எனப்படும் நிமற்றோடாக் பரவியுள்ளது. அரசாங்கம் உண்மையான பிரச்சினையை வெளியே விட தயங்குகின்றது.
அண்மைக்காலமாக இந்த சேதன உரம் பாவித்ததால் ஏற்பட்டுள்ள இந்த வட்டப்புழு நோய் வேளாண்மையின் வேரிலே முடிச்சுகளை ஏற்படுத்துவதால் அந்த வேரூடாக போசனைகள் உரிஞ்சப்படாததன் காரணமாக அந்த வேளாண்மை மஞ்சள் நிறமாகி கபில புள்ளிகள் ஏற்படுகின்றது.
இது பொட்டாசியம், பொஸ்பரஸ் குறைப்பாடு என்று கூறப்படுகின்றது. இது ஏற்றுக்கொள்ளக்கூடிய யாதார்த்தமான விடயம்.
இருப்பினும், மண்ணில் உள்ள பொட்டாசியம், பொஸ்பரஸை உரிஞ்சுவதற்கு கூட இந்த வட்டப்புழு இடையூறாகவுள்ளது.
இது உண்மையில் அண்மையிலே வந்த கோவிட் நோய்தொற்றை விட பாரிய தாக்கத்தை இலங்கையில் ஏற்படுத்தப் போகின்றது என தெரிவித்துள்ளார்.
