ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் யோசனை! ரணில் தலைமையில் கட்சிகளின் விசேட கூட்டம்!
ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும், அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்ட வரைவை ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை வெள்ளிக்கிழமை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
பிரதமர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
21வது அரசியலமைப்பு திருத்தத்தின் வரைவு கடந்த திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது, அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதற்கான பொறுப்பு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நாளை இடம்பெறும் விவாதங்களைத் தொடர்ந்து, எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் அமைச்சரவையில் திருத்த வரைவு சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் பின்னர் அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதேவேளை, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 10 சுயேச்சைக் கட்சிகள் அடங்கிய குழு இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.