டிக்டொக் சமூக ஊடக பிரதிநிதிகளுடன் பிரதமரின் செயலாளர் சந்திப்பு
டிக்டொக் சமூக ஊடக பிரதிநிதிகள் குழுவுக்கும் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரிக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.
அதன்போது, பொழுதுபோக்கு மற்றும் கல்வி நோக்கங்களுக்கு அப்பால் பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு டிக்டொக் சமூக ஊடகத்தை டிஜிட்டல் கருவியாக எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பாடத்திட்டங்களில் திருத்தம்
டிஜிட்டல் கல்வி குறித்த அறிவை வழங்குவதற்கான விதிமுறைகள், ஆராய்ச்சி மற்றும் பாடத்திட்டங்களில் தேவையான திருத்தங்களை சேர்ப்பதன் முக்கியத்துவத்தையும் டிக்டொக் பிரதிநிதிகள் எடுத்துரைத்துள்ளனர்.
அத்துடன், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், டிக்டொக் மூலம் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் விளக்கியமாக பிரதமரின் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் மயமாக்கல்
கல்வித் துறையில் நடந்து வரும் சீர்திருத்தங்களுடன் இத்தகைய ஒத்துழைப்புகளைப் பாராட்டிய பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறையை விரைவாக செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.








