கோட்டைக்கல்லாறு கடற்றொழிலாளர்களின் அவல நிலை(Photo)
கடற்றொழிலாளர்கள் தங்குமடத்தையும், அமைக்கப்பட்ட தினத்திலிருந்து இன்று வரையில் இயங்காமலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தையும் உடன் புனரமைப்பு செய்து தரவேண்டும் என கோட்டைக்கல்லாறு கிழக்கு மீனவர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் தம்பிராசா சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“கடந்த 2012 ஆம் ஆண்டு இந்த கட்டடத்தை கடற்றொழில் நீரியல் வழத் திணைக்களம் எமக்கு முன்பு இருந்த சங்க நிருவாகத்திடம், ஒப்படைத்தார்கள். அதிலிருந்து தொடர்ச்சியாக 3 மாதங்கள் காவலாளி ஒருவரை நியமித்து கண்காணித்து வந்தோம்.
பின்னர் எமது கடற்றொழில் சீராக அமையவில்லை ஆதலால் கட்டத்திற்கு நியமித்த காவலாளியை விலக்கிக் கொண்டோம். பின்னர் நீர் வசதி, மின்சார இணைப்புத் தடைசெய்யப்பட்டன.
அவல நிலை
திணைக்களம் எம்மிடம் இதனை பொறுப்பு தந்தாலும் இதனை இயக்குவதற்குரிய நிதி வசதியையோ ஏனைய உதவிகளையோ ஏற்படுத்தித் தரவில்லை.
கடற்றொழிலாளர்கள் தங்குமடக் கட்டடத்துடன் இணைந்ததாக கடற்றொழிலாளர்களுக்காக எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றும் புதிதாக அமைத்து தரப்பட்டுள்ளது. எம்மிடம் கையளித்த தினத்திலிருந்து இன்று வரையில் இதனை இயக்குவதற்குரிய நடடிவக்கையை துறைசார்ந்த திணைக்களத்தினர் ஏற்படுத்தி தரவில்லை.
தற்போது எமது கடற்றொழிலாளர்கள் தங்குமடமும், எரிபொருள் நிரப்பு நிலையமும் அழிவடைந்த நிலையில் காணப்படுகின்றன. இதனை இவ்வாறு விட்டுவிடாமல் துறைசாந்த திணைக்களத்தினரும், அரசாங்கமும் இதனை நிவர்த்தி செய்து தூர்ந்துபோயுள்ள எமது கடற்றொழிலாளர்கள் தங்குமடத்தையும், அமைக்கப்பட்ட தினத்திலிருந்து இன்று வரையில் இயங்காமலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தையும் உடன் புனரமைப்பு செய்து தரவேண்டும்.
தற்போதைய நிலையில் நாடெங்கிலும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றன. இந்நிலையில் மிக நீண்ட தூரம் சென்றுதான் நாம் எரிபொருளைக் கொள்வனவு செய்து கொண்டு கடற்றொழிலுக்குத் தினமும் செல்லவேண்டியுள்ளது.
எமது கடற்கரையிலேயே அமைந்துள்ள இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் சீராக இயங்குமாக இருந்தால் எமக்கு மாத்திரமின்றி இப்பகுதியிலுள்ள சுமார் 5000 கடற்றொழிலாளர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும்.
தற்போதைய நிலையில் எரிபொருள் தட்டுப்பாட்டால் எமது மீன்பிடி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. முன்பிருந்த எமது கடற்றொழிலாளர்கள் சங்கத்திடம் கடற்றொலில் திணைக்களம் இந்த சொத்துக்களை புதிதாக ஒப்படைத்தாலும், சங்கத்திற்கு நாங்கள் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு பொறுப்பேற்றுள்ள இந்த தகர்ந்துள்ள கடற்றொழிலாளர்கள் தங்குமடத்தையும், இயக்கமின்றி காணப்படும் எரிபொருள் நிரப்பு நிலையத்தையும் தற்போதைய நிலையில் எமக்கு புணரமைத்துத் தரப்படும் பட்சத்தில் அதனை நாம் செவ்வனே கொண்டு நடாத்தக்கூடியதாக அமையும்.
எமது நிலமை தொடர்பில் கடற்றொழில் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளுக்கு நாம் அறிவித்துள்ளோம் அவர்கள் இதுபற்றி இன்னும் கருத்திற்கொள்ளவில்லை. ஏனைய இடங்களிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மிக நீண்ட வரிசையில் நின்றும் மண்ணெண்ணையை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
எனவே எமது கடற்கரையிலே அமைப்பக்கப்பட்டுள்ள இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை இயங்க செய்ய வேண்டும்.
1000 ரூபாவிற்கு மண்ணெண்ணையைக் கொள்வனவு செய்தால் எமக்கு போதாது அவ்வாறு சென்றால் கடலில் தத்தழிக்கும் நிலமை தான் ஏற்படும்” என கூறியுள்ளார்.
கோட்டைக்கல்லாறு கிழக்கு மீனவர் கூட்டுறவுச் சங்கத்தின் செயலாளர் இ.வினிப்பாலா இது தொடர்பில் கரத்து தெரிவிக்கும் போது, “எமது கடற்கரையில் தற்போதைய நிலையில் 15 இயந்திரப்படகுகள், 20 இற்கு மேற்பட்ட தோணிகள், 10 இற்கு மேற்பட்ட கரைவலைகளும் உள்ளன.
இதனை மேம்படுத்துவதற்கு எமது கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தை அரசாங்கம் உடன் புணரமைப்பு செய்து தரவேண்டும்.
எமக்கு ஒரு நாளைக்கு 3000 ரூபாவிற்கு எண்ணை தேவை, ஆனால் 1000 ரூபாவிற்கு தான் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தருகின்றார்கள். இதனால் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. இந்த கட்டடம் சுமார் 20மில்லியன் நிதி ஒதுக்கீட்டில், நிருமாணிக்கப்பட்டுள்ளது.
10 வருடங்கள் கழிந்த நிலையில் இந்த கட்டடத்திலுள்ள அனைத்து பொருட்களும், களவாடப்பட்டுள்ளன. இது தொடர்பில் உரிய திணைக்கத்திற்கும், பொலிஸாருக்கும் தெரிவித்துள்ளோம்”என கூறியுள்ளார்.
“இந்த கட்டடம் கட்டி முடிந்த ஆரம்ப காலப்பகுதியில் பிரதேசத்தில் அதிகளவான மீன்பிடி கலன்கள் காணப்பட்டன. இதனால் மண்ணெண்ணை நிரப்பு நிலையம் நன்றாக இயங்கி அதிகளவில் இலாபமீட்டியது.
தற்போது மீன்படி கலன்கள் குறைவடைந்து மிக குறைவான எண்ணிக்கையில் காணப்படுவதனால் மேற்படி நிரப்பு நிலையம் இயங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. mini Harbor project ஊடாக இக்கட்டடத்தை உள்வாங்குவதற்கு எமது கடற்றொழில் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதற்காக அமைச்சரவையின் ஆலோசனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எனினும் தனியாராகவோ அல்லது அமைப்போ இக்கட்டடத்தை இயக்குவதற்கு அனுமதி கோரினால் எமது பணிப்பாளர் நாயகத்தின் அனுமதி பெற்றபின் இதனைக் கையளிக்க வாய்ப்புண்டு. இதுபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி கடற்கரையிலும், எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று செயழிந்த நிலையில் காணப்படுகின்றது.
மாறாக மாவட்டத்தின் களுவாங்கேணி, பாலமீன்மடு, ஆகிய இடங்களில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் செயற்பட்டு வருகின்றன” என மட்டக்களப்பு மாவட்டத்தின் கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் றுக்சான் சி.குரூஸ் தெரிவித்துள்ளார்.
கோரிக்கை
மக்களின் சொத்துக்களை முறையாக மக்களிடம் ஒப்படைக்க வேண்டியதும், அதனை மக்கள் உரிய முறையில் பேணி அதன் உச்ச பயன்பாடுகளை பெறுகின்றார்களா என்பது தொடர்பில் கவனிக்க வேண்டியதும், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் கடமையாகும்.
குறிப்பாக இவ்வாறான விடயங்ளை கண்காணிப்பதற்காக திணைக்களங்கள் ரீதியாக வெளிக்கள உத்தியோகஸ்த்தர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதிலும் கோட்டைக்கல்லாறு கடற்கரையில் 20மில்லியன் பெறுமதி வாய்ந்த சொத்துக்கள் கவனிப்பாரற்று கிடைப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
இதனால் குறித்த இடம் சமூக விரோத செயல்களுக்கும், அப்பகுதியில் கலாசார சீரழிவுகளுக்கும் இட்டுச் செல்லும் நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
எனவே சம்மந்தப்பட்ட திணைக்களத்தினரும், மக்கள் பிரதிநிதிகளும் அயராது
முயற்சி எடுத்து 20மில்லியன் ரூபா பெறுமதியான மக்களின் சொத்துக்கள் இனி மேலும்
கள்வர்களால் சூறையாடப்படுவதற்கு விடாமல் அங்குள்ள கடற்றொழிலாளர்கள் தங்குமடத்தையும்,
எரிபொருள் நிரப்பு நிலையத்தையும் புனர்நிர்மானம் செய்து பயன்பாட்டுக்கு
விடவேண்டும் என அங்குள்ள மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.