பெருந்தோட்ட நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் : இ.தொ.கா
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அநீதி ஏற்படும் வகையில் அரச பெருந்தோட்ட நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள நிறுவனத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
அரச பெருந்தோட்ட யாக்கம், மக்கள் பெருந்தோட்ட யாக்கம், எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம் உள்ளிட்ட அரச பெருந்தோட்ட நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மேற்படி நிறுவனங்களின் நிர்வாகத்தின் கீழ் தொழில் செய்யும் தொழிலாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
தொழிலாளரிடம் இருந்து அறிவிடப்படும் கொடுப்பனவுகள்
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பாரத் அருள்சாமி மேலும் கூறுகையில்,
அரச பெருந்தோட்ட யாக்கங்களை தனியார் மயப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படும் நகர்வு தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மக்கள் மத்தியிலும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம், சேவைகால கொடுப்பனவு உட்பட தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகைகளை மேற்படி நிறுவனங்கள் இன்னும் செலுத்தி முடிக்கவில்லை. அத்துடன், தொழிலாளர்களிடம் இருந்து அறவிடப்பட்ட ஏனைய கொடுப்பனவுகளுக்கும் என்ன நடக்கும் என்பது தெரியவில்லை.
எனவே, கொடுப்பனவுகள் எல்லாம் செலுத்தப்பட்டு முறையான - நிலையான தீர்வு கிடைக்கும் வரை அரச பெருந்தோட்ட நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதற்கு இடமளிக்கமாட்டோம்.
தொழிலாளர்களுக்கு சகலவிதமான ஏற்பாடுகளும் கிடைக்கப்பெறும் வரை ஒரு அங்குளமேனும் கை வைக்க இடமளிக்கமாட்டோம். அத்துடன், வீடு அமைப்பதற்கான காணி, விவசாயத்துக்குரிய காணி என்பனவும் உறுதி செய்யப்பட வேண்டும்.
இதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். இது சம்பந்தமாக ஜனாதிபதி, பெருந்தோட்ட அமைச்சர், நிதி இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட தரப்பினருக்கும் அறிவிக்கவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



