சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நோக்கில் நீராவி மூலம் இயங்கும் தொடரூந்தை இயக்க திட்டம்
1864 இல் கொழும்பு - கோட்டையில் இருந்து அம்பேபுஸ்ஸ தொடரூந்து நிலையத்திற்கு இடையில் சேவையில் ஈடுபட்ட தொடரூந்து சேவையை குறிக்கும் வகையில், தொடரூந்து திணைக்களம், இரண்டு நிலையங்களுக்கு இடையே நீராவி மூலம் இயங்கும் தொடரூந்தை இயக்க திட்டமிட்டுள்ளது.
தொடரூந்து திணைக்கள பொது மேலாளர் தம்மிக்க ஜெயசூர்ய (Dhammika Jayasurya) இதனை கூறியுள்ளார்.
சுற்றுலாத் துறையில் இலங்கை தொடரூந்துக்கு தனி இடம் உண்டு. எனவே சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதே இதன் முக்கிய நோக்கம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தற்போதைய போக்குவரத்து நெரிசலை குறைக்க தொடரூந்து சேவையை முன்னேற்றுவதே நடைமுறை தீர்வு என்று தொடரூந்து திணைக்கள மேலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக பல சிறப்புத் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்ல வரையான பிரதான தொடரூந்து பாதையை விரிவுபடுத்துதல் மற்றும் நாட்டிற்கு மின்சார தொடரூந்துகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்குகின்றன.
மின்சார தொடரூந்துகள் பாணந்துறையிலிருந்து வெயங்கொட மற்றும் பொல்கஹவெல முதல் களுத்துறை வரை பயணிக்கும் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும் தொடரூந்து திணைக்கள பொது மேலாளர் தம்மிக்க ஜெயசூர்ய தெரிவித்துள்ளார்.