அரசாங்கத்தின் மற்றுமொரு புதிய திட்டம்!
கண்டி நகரை மையமாகக் கொண்ட 168 அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.
இப்பாரிய கண்டி நகர அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட கலந்துரையாடல் கண்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இத்திட்டம், 2035 ஆம் ஆண்டின் போது, பூர்த்தி செய்வதற்கு திட்டமிட்ட பாரிய கண்டி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுவதாக அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் குமுது லால் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி திட்டம்
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ இந்த அபிவிருத்தி திட்டம், கண்டி மாநகர சபை உட்பட உள்ளுராட்சி நிறுவனங்கள் 15 ஐ மையப்படுத்தியதாக 600 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
உத்தேச திட்டம் 168 இல் 13 திட்டங்கள் கண்டி நகரத்திலும் செயற்படுத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம், கந்த உடரட தேஜாத்வித அகநகரய (மலைப்பகுதியில் மலை நாட்டின் புகழ்பெற்ற தலைநகரம்) எனும் இந்த கண்டி நகரில் சமய, கலாச்சார, வரலாற்று மற்றும் கலாச்சார உரிமைகள் பரவலாக உள்வாங்கப்படும் விதமாக நடைமுறைப்படுத்தப்படும்.
இதனடிப்படையில், பல்நோக்கு போக்குவரத்து வாகனத் தரிப்பிடம் அமைத்தல், ஹிருஸ்ஸகல சந்திக்கு அண்மையிலிருந்து வில்லியம் கொபல்லாவ மாவத்தை ஊடாக வைத்தியசாலை சந்தி வரையான வீதி அபிவிருத்தி திட்டங்கள்.
நடவடிக்கைகள்
மஹிய்யாவை சுரங்கப்பாதை நிர்மாணம், குடாரத்வத்த வீதி மற்றும் வில்லியம் கொபல்லாவ மாவத்தை அபிவிருத்தி, தென்னேகும்புறயிலிருந்து தர்மராஜ வித்தியாலயத்திற்கு அண்மையில் வரையான பிரதான வீதி ஆகியவற்றின் அபிவிருத்தி நடவடிக்கைகள் இத்திட்டத்தின் கீழ் இடம்பெறவுள்ளது.
மேலும், இங்கு பொது வாகனத் தரிப்படங்களை நிர்மாணிப்பதுடன் நுவரவெல மற்றும் சிங்க ரெஜிமேந்து வளாகங்கள் அமைந்துள்ள பிரதேசத்திற்கு அண்மையில் பொது போக்குவரத்து வாகனத் தரிப்பிடங்கள் இரண்டை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டது.'' என கூறியுள்ளார்.