நாமலுக்கு பிரதமர் பதவியை வழங்க திட்டம்? - காரணம் இதுதான்
பிரதமர் மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாகவும், அவரது மகனான அமைச்சர் நாமல் ராஜபக்ச பிரதமர் பதவியை ஏற்க திட்டமிட்டுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனை உறுதி செய்யும் வகையில் நாமல் ராஜபக்ச அண்மையில் ஐ.டி மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டதன் மூலம் அவரது தற்போதைய அமைச்சரவை இலாகாவுக்கு கூடுதல் இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாமல் ராஜபக்சவுக்கு விரைவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் முக்கிய வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக, பசில் ராஜபக்ச, மகிந்த ராஜபக்சவின் அரசியல் வாரிசாக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், பசில் ராஜபக்சவின் செயற்பாடுகள் மீது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டணி கட்சிகள் அதிருப்தி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், பசில் ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டால் ஆளும் கட்சிக்குள் பிளவு ஏற்படும் என்ற சூழலில் நாமல் ராஜபக்ச பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்த ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெறுவாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
எனினும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று பிரதமர் ஏற்கனவே முடிவு செய்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.