கிளிநொச்சி குளத்தை சுற்றுலாத்தளமாக அபிவிருத்தி செய்ய திட்டம்
கிளிநொச்சி நகர மத்தியில் அமைந்துள்ள கிளிநொச்சி குளத்தினை அபிவிருத்தி செய்து, அதனை சுற்றுலாத்தளமாக அமைப்பதற்கான திட்ட முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குறித்த குளத்தினை கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்து பொழுதுபோக்கு மையமாக மாற்றும் வகையில் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
இதற்கான திட்டமிடல் ஒன்று இரணைமடு நீர்ப்பாசன பொறியியலாளர் செந்தூரனால் இன்று குறித்த குளத்தைப் பார்வையிட வந்த குழுவினரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் நடைப் பயிற்சிக்கான வலயம், சிறுவர் பூங்கா, நீரில் பயணிக்கும் வகையிலான வசதி, பொழுதுபோக்கு வசதிகள், மின்னொளியூட்டல், வர்த்தக வசதிகள் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டமிடல் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குளத்தின் சூழவுள்ள பகுதி அணைக் கட்டாக்கப்பட்டு, அதில் நடைப் பயிற்சிக்கான வசதிகள், இருக்கை வசதிகள் உள்ளடக்கிய முதல் கட்ட பணிகளிற்கு ரூபா 11 கோடி செலவுத் தொகை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பொழுது போக்கு இடங்கள் மற்றும் நடைப் பயிற்சிக்கான பொருத்தமான இடங்கள் இல்லாத நிலையில் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் நன்மையளிக்கும் என மாவட்டத்தில் உள்ள புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர்.
இயற்கையை ரசித்தல், குடும்ப சுற்றுலாக்கள், பொழுது போக்குகள், நடைப் பயிற்சி உள்ளிட்டவற்றை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலான குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மக்கள் மன உலைச்சல் நிலையிலிருந்து மீளவும், இளைஞர் மத்தியில் காணப்படும் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட நிலையிலிருந்து விடுபட்டு நல்லதொரு சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர்கள் நம்பிக்கை வெளியிடுகின்றனர்.
குறித்த திட்டமானது பல்வேறு அமைப்புக்கள், கல்வியலாளர்கள், சமூகங்களால் முன்மொழியப்பட்ட விடயம் என்பதாலும், மாவட்டத்திற்கான பிரதான பொழுதுபோக்கு மையமாகவும் பொருளாதாரத்தை ஈட்ட வல்ல திட்டம் என்பதாலும் அதனை விரைவாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க சிவில் அமைப்புக்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.