நல்லூரில் தொங்கவிடப்பட்டுள்ள உருத்திரகுமாரனின் படங்கள்! நடந்தது என்ன ?
சிறிலங்கா காவல்துறையின் பாதுகாப்போடு, யாழ்ப்பாணம் நல்லூரில் மேற்கொள்ளப்பட்டுவரும் (வெறிச்சோடிய) அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில்(?) நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனின் படங்கள் பொதித்த பதாதை தொங்கவிடப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளினாலும், ஏனைய ஆயுதக்குழுக்களாலும் கடத்தப்பட்டு கொல்லப்பட்டோருக்கு நீதிகோருகின்றோம் என்ற பெயரில் காணப்பட்ட இந்த உணவுத்தவிப்பு போராட்டத்திற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்துவரப்பட்டவர்களுடன், யாழில் இயங்கும் சிலரும் காணப்படுவதாக யாழ் செய்திகள் கூறுகின்றன.
‘சிறிலங்கா அரசினால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், வெளிநாட்டில் விடுதலைப்புலிகளை அடையாளப்படுத்தி இயங்கி வரும் பயங்கரவாத அமைப்பு’ என்று தொங்கவிடப்பட்டுள்ள அந்தப் பதாதையில் பொறிக்கப்பட்டுள்ளதோடு, அதன் பிரதமராக இருக்கின்ற விசுவநாதன் உருத்திரகுமாரன், இன்னமும் அமெரிக்காவினால் கைது செய்யப்படவில்லை என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இக்குழுவுடன் தமக்கு தேர்தல் கால கூட்டே தவிர, இப்போராட்டத்துக்கும் தமக்கும் தொடர்பில்லை என சிறிலங்கா சுதந்திரக்கட்சி எம்பி அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்துக்கு நெருக்கடியினை ஏற்படுத்தியுள்ள ஜெனீவா விவகாரத்தில் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தீவிர முனைப்பு, சிறிலங்கா அரசாங்கத்துக்கு பெரும் சவாலாக உள்ளதென கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறிலங்கா அரச ஆங்கில ஊடகம் கருத்து வெளியிட்டிருந்ததோடு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு செயலரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு எதிரான தமது கோபத்தை வெளிப்படுத்தியயிருந்தனர்.
அதன் ஒரு வெளிப்பாடாகவே நல்லூரில் இவ்வாறு பதாதையை தொங்கிவிட்டு தமது கோபத்தை சிறிலங்கா அரசாங்கம் தனது கைக்கூலிகள் மூலம் வெளிப்படுத்துவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல்துறை கருத்து வெளியிட்டுள்ளது.
இதேவேளை, பெரிதாக வெளி உலகின் பார்வைக்கு தெரியாமல் இருந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை பரபரப்பாக்கும் நோக்குடன் யாழ் மாநகரசபை இன்று ஒரு சச்சரவை அங்கு ஏற்படுத்தியதாக யாழ் மக்கள் குற்றம் சுமத்துகின்றார்கள்.
யாழ் மாநாகர சபைக்கு சொந்தமான காணியில் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள போராட்டகாரர்களது கொட்டகையினை அகற்றுமாறு இன்று திங்கட்கிழமை, மாநகரசபை உத்திரவிட்டிருந்ததுடன், ஆனால், அதனை ஏற்க அவர்கள் மறுத்திருந்ததோடு, மாநாகர சபை உறுப்பினருக்கு எதிராக அடாவடியில் ஈடுபட்டிருந்த காட்சிகள் சமூகவலைத்தளங்களை ஆடகொண்டிருந்தன.
ஊண்ணாவிரதம் நாளைய தினம் முடிவுக்கு வர இருக்கின்ற நிலையில், அந்த உண்ணாவிரதத்தை பற்றி சமூகவலைத்தளங்களில் பேசவைப்பதற்கான ஒரு முயற்சியே இன்று மேற்கொள்ளப்பட்ட மாநாகரசபையின் உத்தரவு என்றும் மக்கள் குற்றம் சுமத்தியிருந்தார்கள்.
