175 நாள்களைத் தாண்டிய தடுப்புக்காவல் : சுரேஷ் சலேவுக்கு நீதி கோரி மனு
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, ஜனாதிபதியின் தன்னிச்சையான தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் 175 நாள்களுக்கு மேலாகச் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனக் குற்றஞ்சாட்டி, அவருக்கு நீதி கோரி பொதுமக்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு ஒன்று கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
சலேவுக்கு ஆதரவளிக்கும் ஒரு குழுவினரால் இந்த கோரிக்கை மனு இன்று வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நீதி வழங்குவதற்கான நடவடிக்கை
நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தி, அவருக்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கையெழுத்துகளுடன் கூடிய இந்த ஆவணம், அவரது தடுப்புக்காவல் தொடர்பான கவலைகளைச் சர்வதேச மட்டத்தில் கொண்டு செல்லும் நோக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை மனு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் மேற்கொள்ளவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதுவரை எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை.