தேசபந்து தென்னகோனுக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல்
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பது தொடர்பில் அரசியலமைப்பு பேரவை, ஜனாதிபதிக்கு அனுமதி வழங்குவதை தடுக்குமாறு கோரி தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணி ஒருவர் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, பல அதிகாரிகளின் தீவிர அலட்சியம் மற்றும் குறைபாடுகளை கண்டறிந்துள்ளதாக மனுதாரர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஒழுக்காற்று நடவடிக்கை
அந்த ஆணைக்குழு, சிரேஸ்ட பிரதி பொலிஸ் தேசபந்து தென்னகோன் உட்பட இலங்கை பொலிஸில் பலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்திருந்தது.
இந்தநிலையில், கணிசமான பொலிஸ் பிரசன்னம் மற்றும் அவசரகால விதிமுறைகளைப் பயன்படுத்திய தேசபந்து தென்னகோன், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உள்ள காலி முகத்திடலில் நிராயுதபாணிகளாக இருந்த பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய குழுவைத் தடுக்கத் தவறியதாக மனுதாரர் மேலும் கூறியுள்ளார்.
அத்துடன் தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட பிரதிவாதிகள், முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரின் சித்திரவதை தொடர்பில் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்துள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தன்னிச்சையான முடிவு
அதேநேரம் தென்னகோனை 2022 ஜூலை 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பெருந்தொகை பணம் தொடர்பிலும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
இந்தளவு குற்றச்சாட்டுக்களின் மத்தியில் தேசபந்து தென்னகோனுக்கு பொலிஸ் மா அதிபர் என்ற அதிக பொறுப்புகள் மற்றும் அதிகாரங்களை வழங்குவது, தன்னிச்சையானது மற்றும் பகுத்தறிவற்றது.அத்துடன் பாதுகாப்பிற்கான உரிமையை சீர்குலைக்கும் என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
[WSBLGQC ]
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |