அஜித் நிவார்ட் கப்ரால் தொடர்பில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல்
இலங்கை அரசாங்கத்தின் முன்னாள் ராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ராலை, மத்திய வங்கியின் ஆளுநராக, நியமிப்பதற்கு, எந்த ஒரு சட்டரீதியான காரணமும் இல்லை என்று அறிவிக்கக்கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார இன்று உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் புதிய ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால், மத்திய வங்கியின் கண்காணிப்பு சபையினர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜெயசுந்தர ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஆளும் அரசியல் கட்சியின் அரசியல் நிகழ்ச்சி நிரலை மேலும் மேம்படுத்தும் நோக்கில் கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தில், தேசிய நோக்கங்கள் மற்றும் பொது நலன்கள் எதுவும் இல்லை என மனுதாரர் தெரிவித்துள்ளார்.
அஜித் நிவர்ட் கப்ரால், கடந்த காலத்தில் செயற்பட்ட விதத்தின் அடிப்படையில், மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை வகிப்பதற்குத் தேவையான திறமை, நேர்மை மற்றும் பொறுப்பு அவருக்கு இல்லை என்பதை நிரூபித்துள்ளார் என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.