அஜித் நிவர்ட் கப்ராலுக்கு எதிராக மனு தாக்கல்!
மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவர்ட் கப்ரால் செயல்படுவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி இடைக்காலத் தடை கோரிய மனு ஒன்று, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தென் மற்றும் மத்திய மாகாண முன்னாள் ஆளுநர் ராஜித் கீர்த்தி தென்னகோன் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
மத்திய வங்கியின் கணக்காய்வு அறிக்கையில் உள்ள ஆதாரங்களைக் கருத்தில் கொண்டு அஜித் நிவர்ட் கப்ரால் மீது சட்ட நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபர் மற்றும் காவல்துறை அதிபரை கட்டாயப்படுத்துமாறு மனுதாரர் கோரியுள்ளார்.
மனுவில், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பி.பி ஜயசுந்தர உட்பட்டவர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
2017 ஆம் ஆண்டின் ஜனாதிபதி குழு அறிக்கையின்படி, மத்திய வங்கியில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பிலேயே இந்த விசாரணை, மனுதாரரால் கோரப்பட்டுள்ளது.
2002 ஜனவரி முதல் 2015, பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரையான மீளாய்வு காலம் தொடர்பான கணக்காய்வு அறிக்கையின் படி பல மில்லியன் ரூபாய்கள் நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில், கப்ரால், இலங்கை குடியரசு மற்றும் அதன் வரி செலுத்துவோர் பணத்திற்கு இழப்புகளை ஏற்படுத்தியதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார். கப்ராலின், ஹெட்ஜிங் ஒப்பந்தத்தால் இலங்கை அரசாங்கத்துக்கு 200 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான நட்டம் ஏற்பட்டது.
கிரேக்க முறிக் காரணமாக 10 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டது என்பதையும் மனுதாரரான தென் மற்றும் மத்திய மாகாண முன்னாள் ஆளுநர் ராஜித் கீர்த்தி தென்னக்கோன் சுட்டிக்காட்டியுள்ளார்.