அரச பேருந்தில் முதியவரிடம் இருந்து பணத்தை பறித்து சென்ற நபர் இளைஞர்களால் மடக்கிப்பிடிப்பு(Photos)
மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அரச பேருந்தில் பயணம் செய்த முதியவரிடம் இருந்து சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான பணத்தை நானாட்டான் பேருந்து தரிப்பு நிலையத்தில் பயணிகள் ஏறுவதற்காக நிறுத்திய போது பறித்துச் சென்ற இளைஞரை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.
நேற்று(7) இரவு குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா - மெனிக்பாம் பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவர் மன்னார் எழுத்தூர் பகுதியில் வசிக்கும் அவருடைய மகளிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு கொழும்பு பேருந்து மூலம் வவுனியாவுக்குச் செல்வதற்காக மன்னாரிலிருந்து குறித்த பேருந்தில் பயணித்துள்ளார்.
அதேநேரம் குறித்த பேருந்தில் திருகோணமலையைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவர் முதியவரின் அருகிலிருந்து பயணித்துள்ளார்.
மன்னாரில் குறித்த பேருந்து நானாட்டான் பிரதேச பேருந்து தரிப்பு நிலையத்தைச் சென்றடைந்து பயணிகளை ஏற்றுவதற்காகப் பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்திய போது குறித்த முதியவர் வைத்திருந்த பணத்தை இளைஞன் பறித்துக் கொண்டு பேருந்திலிருந்து பாய்ந்து ஓடியுள்ளார்.
இந்த நிலையில் முதியவரின் கூச்சலைக் கண்ட அப்பகுதியிலிருந்த இளைஞர்கள் குறித்த திருடனைத் துரத்திச் சென்று பணத்தோடு மடக்கிப்பிடித்தனர்.
உடனடியாக முருங்கன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த முருங்கன் பொலிஸாரிடம் பணத்தைத் திருடிய இளைஞரை இளைஞர்கள் ஒப்படைத்துள்ளனர்.
உடனடியாக குறித்த இளைஞரையும், முதியவரையும் மேலதிக விசாரணைக்காக பொலிஸார் முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.









தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
