புலனாய்வுப் பிரிவு அதிகாரியின் வங்கி அட்டை மூலம் மோசடி செய்த நபர்
புலனாய்வுப் பிரிவின் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் வங்கி பணம் மீளபெறல் இயந்திரத்தில் மறந்து வைத்து விட்டு சென்ற அட்டையை பயன்படுத்தி ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரூபாவுக்கும் மேல் மோசடி செய்த நபர் 13 நாட்களுக்கு பின்னர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நிட்டம்புவை நகரில் உள்ள அரச வங்கி ஒன்றுக்கு கடந்த 14 ஆம் திகதி சென்ற புலனாய்வுப் பிரிவின் பெண் அதிகாரி, அங்குள்ள பணம் மீளபெறல் இயந்திரத்தில் பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர், மறந்து அட்டையை இயந்திரத்திற்குள் விட்டுச் சென்றுள்ளார்.
அட்டையை மறந்து வைத்து விட்டதை உணர்ந்த அவர் மீண்டும் சிறிது நேரத்தில் வங்கிக்கு சென்று இயந்திரத்தை பரிசோதித்த போது அட்டை காணாமல் போயிருந்தது.
இது தொடர்பாக நிட்டம்புவை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவில் செய்த முறைப்பாட்டை அடுத்து நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளின் பின்னர் ஊராபொல பிரதேசத்தில் சந்தேகத்தின் பேரில் இன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் குறித்த பணம் மீளபெறல் அட்டையை பயன்படுத்தி நிட்டம்புவை நகரில் 74 ஆயிரம் ரூபாவுக்கு செல்போன் கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த நபர் நகரில் உள்ள மற்றுமொரு கடைக்கு சென்று 42 ஆயிரம் ரூபாவுக்கு செல்போனை கொள்வனவு செய்து பணத்தை அட்டை மூலம் பெற்றுக்கொள்ளுமாறு கடை உரிமையாளரிடம் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து கொள்வனவு செய்த செல்போனை திரும்ப கொடுத்து விட்டு, 42 ஆயிரம் ரூபாய் பணத்தை உரிமையாளரிடம் பெற்றுக்கொண்டுள்ளார். அந்த பணத்தை பயன்படுத்தி ஆடைகளை கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக நிட்டம்புவை பொலிஸார் கூறியுள்ளனர்.