மட்டக்களப்பில் காவலுக்கு சென்ற கூலித் தொழிலாளிக்கு நேர்ந்த கதி!
மட்டக்களப்பு - ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கம்பனிவட்டை வயற்பிரதேசத்தில், காட்டு யானையின் தாக்குதலில் 68 வயதான கூலித் தொழிலாளி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (31.03.2026) நள்ளிரவு இடம்பெற்றதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்ஸ்தர் பலி
உயிரிழந்தவர் மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த ஐயாத்துரை கந்தசாமி, நான்கு பிள்ளைகளின் தந்தையாகவும், கடந்த இரண்டு வருடங்களாக நெல் வயல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கம்பனிவட்டை வயற்பிரதேசத்தில் உயரமான கட்டடத்தில் தங்கியிருந்தவர், முன்பு ஒருமுறை தவறிவிழுந்ததும், தரையில் உறங்கி வந்த நிலையில் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

சம்பவ நேரத்தில், யானை வயலில் உள்ள நெல் மூடையினை உட்கொண்டதை கவனித்து விரட்ட முயன்ற போது, காந்தசாமியை தாக்கியுள்ளது. சடலம் வயல்வெளியில் சேற்றில் புதைந்து காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து, திடீர் மரண விசாரணை அதிகாரி எம்எஸ்எம் நசிர் சம்பவ இடத்தைச் சென்று பார்வையிட்டுள்ளதுடன், விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஆயித்தியமலை பொலிஸார் குடும்ப உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்து, மேலதிக விசாரணைகளை தொடர்ந்து வருகின்றனர்.