திருகோணமலையில் விளையாட்டு மைதானத்தில் அத்துமீறி கட்டிடம் அமைக்க முற்பட்ட நபருக்கு கட்டாணை!
கிண்ணியா - பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, கச்சக்கொடிதீவு விளையாட்டு மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து, கட்டிடம் அமைக்க முற்பட்ட நபருக்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் (11) திகதி கட்டாணை எனப்படும் தடைக்கட்டளையை பிறப்பித்துள்ளது.
கிண்ணியா - கச்சக்கொடிதீவு விளையாட்டு மைதான காணி தொடர்பாக கச்சக்கொடிதீவு வில்வெளி பிரதேசத்தை தனி நபர் ஒருவருக்கும், கச்சக்கொடிதீவு ஹீரோ விளையாட்டுக் கழக செயலாளருக்குமிடையில் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்று ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.
இந்த நிலையில், குறித்த காணிக்குள் திடீரென நிரந்தர கட்டிடம் அமைக்கும் பணிகள் அந்த தனி நபரினால் கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்பட்டன.
விசேட நகர்த்தல் பத்திரம்
இதனை எதிர்த்து, கச்சக்கொடிதீவு விளையாட்டுக்கழக செயலாளர் தில்ஷான் சார்பாக ஆஜராகும் சட்டத்தரணி A. S.முகம்மது நளீஜ் மூலம் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு, விசேட நகர்த்தல் பத்திரம் மூலம், குறித்த வழக்கினை விசாரணைக்கு எடுக்குமாறு கோரப்பட்டது.
இவ்வாறான நிலையில் இவ்வழக்கின் அவசர தன்மையினை கருத்திற்கொண்டு, குறித்த வழக்கினை அன்றைய தினமே நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
தற்போது நீதிமன்றங்களுக்கு ஏப்ரல் பருவ கால விடுமுறை என்பதாலும், எதிர்வரும் நாட்கள் அரச விடுமுறைகள் இருப்பதனாலும் குறித்த காலத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தி, அந்த மைதான காணிக்குள் சட்டவிரோதமாக கட்டிடப் பணிகள் இடம்பெறுவதாக, இதன்போது சட்டத்தரணி நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார்.
இதனைக் கவனத்தில் எடுத்த திருகோணமலை மாவட்ட நீதிமன்றம், கச்சக்கொடிதீவு விளையாட்டு மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து, கட்டிடம் அமைக்க முற்பட்ட நபருக்கு எதிராக, கட்டாணை எனப்படும் தடைக்கட்டளையை பிறப்பித்துள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவு
குறித்த கட்டளையில் வழக்காளி - எதிர்மனுதாரர், அவரின் கீழ் தங்கி வாழ்வோர், அவரின் பிரதிநிதிகள் எவரும் குறித்த காணிக்குள் அத்துமீறி நுழையக்கூடாது என்றும் கட்டிட அபிவிருத்தி பணிகள் எதையும் மேற்கொள்ள கூடாது என்றும், விளையாட்டுக் கழக உறுப்பினர்களின் அமைதியான உடமையினை குழப்பக் கூடாது என்றும் கட்டாணை எனும் தடைக்கட்டளையை பிறப்பித்துள்ளது.
மேலும், குறித்த விண்ணப்பம் தொடர்பில், நீர் ஏதும் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால், எதிர்வரும் 23.04.2025 திகதியன்று காலை 9.00 மணிக்கு அல்லது அதற்கு முன்னர் மன்றில் தோன்றி, உமது ஆட்சேபனையை தெரிவிக்கலாம் எனவும், தவறும் பட்சத்தில் மேற்குறித்தவாறான கட்டாணை, இடைக்கால தடை உத்தரவாக வழங்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குறித்த கட்டளை, எதிர்வரும் 2025.04.23 ஆம் திகதி குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறயிருக்கும் தினம் வரை வலுவிலிருக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் நீதிமன்ற கட்டளை திருகோணமலை மாவட்ட நீதிமன்ற கட்டளை சேவகரினால் அத்துமீறி கட்டிடம் அமைக்க முற்பட்ட நபருக்கு ஒப்பவிக்கப்பட்டதுடன், அம்மைதான காணியிலும் பகிரங்கமாக ஒட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri
