இளம் பெண்ணை கடத்தி ஆறு மாதம் தடுத்து வைத்திருந்தவர் கைது
மாத்தறை - கம்புறுப்பிட்டிய பிரதேசத்தில் இளம் பெண் ஒருவரை கடத்தி சென்று ஆறு மாத காலம் தடுத்து வைத்திருந்தவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்புறுப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள மஸ்தகமுல்லை பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான 29 வயதுடைய பெண்ணொருவரை அப்பிரதேச வர்த்தகர் ஒருவர் கடத்திச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தன்னிடமிருந்து தப்பிச் சென்றால் பிள்ளைகள் மற்றும் கணவரை கொன்றுவிடுவதாக மிரட்டி குறித்த பெண்ணை தனது வீட்டில் கடந்த ஆறுமாத காலமாக அவர் அடைத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பொலிஸ் மகளிர் பிரிவு
அக்காலப்பகுதியில் குறித்த பெண்ணை வன்புணர்விற்கு உள்ளாக்கி இருப்பதுடன் அவரை நிர்வாணப்படுத்தி காணொளிகளும் பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.
குறித்த பெண்ணின் தாயார் சம்பவம் தொடர்பில் அப்பிரதேசத்தில் இருக்கும் பல பொலிஸ் நிலையங்களில் முறையிட்டும் பலன் இன்றிப் போக நேரடியாக மாத்தறை மாவட்ட பொலிஸ் தலைமையகத்தில் முறையிட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து பொலிஸ் மகளிர் பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவொன்று நேரடியாக விஜயம் செய்து சிறை வைக்கப்பட்டிருந்த பெண்ணை மீட்டுள்ளனர்.
மருத்துவப் பரிசோதனை
அவரை அச்சுறுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த மீன் வெட்டும் கத்தியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபரின் கையடக்க தொலைபேசியை பறிமுதல் செய்த பொலிஸார், குறித்த நபரையும் கைது செய்துள்ளனர்.
அவரிடம் இருந்து மீட்கப்பட்ட பெண்ணை மருத்துவப் பரிசோதனை மற்றும் மேலதிக சிகிச்சைகளுக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |