உடனடியாக தீர்வு வேண்டும்! வடிவேல் சுரேஷ் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கை
ஆசிரிய உதவியாளர்களுக்குரிய நிரந்தர நியமனம் வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,பல வருட காலமாக உதவி ஆசிரியர்களாக பணிபுரிந்தும் கூட அவர்களை நிரந்தர சேவையில் இணைக்காமல் இருப்பதினாலும் அவர்களுக்குரிய முறையான கொடுப்பனவு வழங்கப்படாமையினாலும் பல இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.
உடனடியாக தீர்வு
இந்நிலையில் அரசாங்கத்தின் ஊடாக 3,000 உதவி ஆசிரியர்களை வெற்றிடங்களுக்கு நியமிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அது வரவேற்கத்தக்க விடயமாக இருந்த போதிலும் தற்சமயம் உதவி ஆசிரியர்களாக சேவை புரிபவர்களின் பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்து வைத்த பின்னரே புதிய நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்.
அரசாங்கமும் கல்வி அமைச்சும் ஒன்றிணைந்து உடனடியாக இதற்கு தீர்வு வழங்க வேண்டும். மேலும் பொறிமுறை ஒன்றினூடாகவே இந்த நியமனங்களும் வழங்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.