மட்டக்களப்பில் எரிவாயுக்காக காத்திருந்த மக்கள் எரிவாயு லொறியை மறித்து ஆர்ப்பாட்டம் (Photos)
மட்டக்களப்பு நகரில் பயினியர் வீதியில் எரிவாயுவுக்காகக் காத்திருந்த 250 பேருக்கு மட்டும் எரிவாயு வழங்கிவிட்டுச் செல்ல முற்பட்ட லொறியை, எரிவாயுவைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்து அதனை பெறாதவர்கள் மறித்து தமக்கு எப்போது எரிவாயு தரப்படும் என உறுதிப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எரிவாயுவைப் பெறுவதற்காகக் கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 800 பேர் வரையிலான மக்கள்
பயினியர் வீதியில் வரிசையில் காத்திருந்தனர்.
இதில் அன்றையதினம் எரிவாயு முகவர்களால் 400 பேருக்கு எரிவாயுக்களை வழங்கப்பட்டது.
இந்த நிலையில் வரிசையில் காத்திருந்த ஏனையவர்கள் எரிவாயுவைப் பெறாது தொடர்ந்து மாலை வரை காத்திருந்து வீடுகளுக்குச் சென்றனர்.
இந்த நிலையில் சனிக்கிழமை எரிவாயு வழங்கப்படும் என அன்று அதிகாலை 3 மணி தொடக்கம் வீதியில் வெற்றுச் சிலிண்டர்களுடன் மக்கள் காத்திருந்தனர்.
ஆனால் அன்றும் வழங்கப்படாததையடுத்து தொடர்ந்து நேற்று வரை மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.
இவ்வாறான நிலையில் நேற்று மாலை முகவர்களால் லொறியில் கொண்டுவரப்பட்ட 250 எரிவாயு சிலிண்டர்கள் வரிசையில் காத்திருந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
வரிசையில் காத்திருந்த ஏனையவர்கள் எரிவாயுவைப் பெறாத நிலையில், எரிவாயு தந்தால் தான் லொறி இங்கிருந்து செல்ல அனுமதிக்க முடியும் என லொறியை வெளியேறிச் செல்லவிடாது மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு வந்த பொலிஸாரிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் எரிவாயு தரப்படும் வரிசையில் காத்திருந்தவர்களுக்கு இலக்கம் வழங்குமாறும் கோரி லொறியை செல்லவிடாது சுற்றிவளைத்து இருந்தனர்.
இதனை தொடர்ந்து பொலிஸார் எரிவாயு முகவருடன் பேசி புதன்கிழமை எரிவாயு தருவதாகவும் அதற்காக வரிசையில் நிற்பவர்களுக்கு இலக்கங்கள் முகவர்களால் தரப்படும் என உறுதி அளித்தமையை அடுத்து லொறி அங்கிருந்து செல்ல ஆர்பாட்டகாரர்கள் அனுமதியளித்தனர்.
இருந்தபோதும் தொடர்ந்து அங்கு எரிவாயு சிலிண்டர்களுடன் தொடர்ந்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.