யாழ்.சுழிபுரத்தில் கடற்றொழில் அமைச்சரின் வருகையால் பாதிப்படைந்த பிரதேச வாசிகள்
யாழ். சுழிபுரத்தில் கடற்றொழில் அமைச்சர் வருகை தருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் காலை முதல் மாலை வரை கடற்றொழிலாளர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதை அவதானிக்க முடிந்தது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, “நேற்றைய தினம் (08) சுழிபுரம் காட்டுப்புலம் கடற்றொழிலாளர்களை காலை பத்து மணியளவில் கடற்தொழிலாளர் மண்டபத்தில் ஒன்று கூடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, கடற்றொழில் அமைச்சர் உட்பட்ட குழு, மூன்று வாகனங்களில் வருகை தருவதாகவும் பிரதேச கடற்றொழில் பரிசோதகர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் வருகை தராமை
இந்தநிலையில், குறித்த கடற்றொழிலாளர்கள் பத்து மணியிலிருந்து 12:30 மணிவரை காத்திருந்த நிலையில் சிலர் வீடுகளிற்கு திரும்பியுள்ளனர்.
இதையடுத்து, மாலை 2: 00 மணியளவில் தாம் வருகை தரமாட்டோம் என தெரிவித்த நிலையில் எஞ்சியவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை சுழிபுரம் சவுக்கடி கடற்றொழிலாளர்களையும், கடற்கரைக்கு வருகை தருமாறு கோரிய நிலையிலும் அமைச்சர் வருகை தராமையினால் கடற்றொழிலாளர்கள் ஏமாற்றத்துடன் தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
தற்பொழுது வெப்பநிலை தொடர்பில் எதிர்மறையான கருத்துக்கள் நிலவும் நிலையில் வயது முதிர்ந்த சில முதியவர்களும் நீண்ட நேரம் காத்திருந்து விட்டு சென்றுள்ளதாக அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
பிரதேச வாசிகள் விசனம்
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தமது வாழ்வியலை நடாத்தி வரும் கடற்றொழிலாளர்கள், மக்கள் பிரதிநிதி ஒருவருக்காக நீண்ட நேரம் காத்திருந்து தேர்தல் காலத்தில் கூட திரும்பியுள்ளனர்.
இதேவேளை அரச துறை சார் கடற்றொழில் பரிசோதகருக்கும் காலை முதல் தனது ஏனைய வேலைகளை விடுத்து அமைச்சரின் வருகைக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
இனிவரும் காலங்களிலாவது பொறுப்பு வாய்ந்த மக்கள் பிரதிநிதிகளாக செயற்பாடுவார்களா எனவும் தேர்தல் காலங்களிலேயே வருகிறதாக கூறி விட்டு வருகை தராத அமைச்சர் எதிர்காலங்களிலாவது எவ்வாறு வருகை தருவார் என்பதில் என்ன நிச்சயம் இருக்கின்றது என பிரதேசத்தவர்கள் கேள்வி எழுப்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |