வடமராட்சி கிழக்கு அம்பன் வைத்தியசாலையின் அசமந்த செயற்பாடு ! அவசர நோயாளிகள் அவதி
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு அம்பன் பிரதேச வைத்தியசாலையில் நீண்ட காலமாக வைத்தியர்கள் தங்களது கடமைகளை சரிவர செய்வதில்லை என பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
எனவே, குறித்த வைத்தியசாலை திறம்பட செயற்பட ஆவணம் செய்து தருமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு அம்பன் பிரதேச வைத்தியசாலையில் நேற்றைய தினம் வைத்தியர் மற்றும் நோயாளர் காவு வண்டி இல்லாத காரணத்தினால் அவசரமாக சிகிச்சையளிக்கப்பட வேண்டிய நோயாளி ஒருவர் ஒரு மணித்தியாலத்திற்கு பின்னர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை நோயாளர் காவு வண்டி மூலம் அனுப்பப்பட்ட சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வைத்தியர்களுக்கான ஆளணி வெற்றிடம்
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நேற்றைய தினம் திடீரென நோய் வாய்ப்பட்ட ஒருவரை அம்பன் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அங்கு வைத்தியர் கடமையில் இல்லாத நிலையில்,நோயாளர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு நோயாளி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த அம்பன் பிரதேச வைத்தியசாலைக்கு இரண்டு வைத்தியர்களுக்கான ஆளணி வெற்றிடம் இருக்கின்ற போது தற்போது ஒரு பெண் மருத்துவ அதிகாரி மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வைத்தியர் காலை 9:00 மணியிலிருந்து சனி, ஞாயிறு தவிர்ந்த நாட்களில் 4:00 மணி வரையே கடமையில் ஈடுபடுவதாகவும், மருத்துவரது கடமை நேரத்திற்கு முன்னரும், பின்னரும் சிகிச்சை பெறுவதற்காக செல்பவர்கள் நாளாந்தம் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அம்பன் ஆதார வைத்தியசாலையில் நீண்ட காலமாக வைத்தியர்கள் தங்களது கடமைகளை சரிவர செய்வதில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் விளக்கம்
இது தொடர்பில் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது,
பிரதேச வைத்தியசாலைக்கு இரண்டு வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த மருத்துவமனையில் நோயாளர் காவு வண்டி பழுதடைந்த நிலையில் அதனை திருத்தம் செய்வதற்கான நிதியின்மை காரணமாக வாகன திருத்தகம் ஒன்றில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த அம்பன் பிரதேச வைத்தியசாலைக்கு 24 மணி நேரமும் கடமையில் ஈடுபடுவதற்கு அவர்களுக்கான விடுதி வசதி செய்யப்பட்டும் வைத்தியர் ஒரு நாள் கூட அங்கு தங்கியிருந்து பணியாற்றுவதில்லை எனவும், மருத்துவமனை திறம்பட செயற்பட ஆவனம் செய்து தருமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இது விடயமாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், உட்பட துறை சார் அதிகாரிகளுடன் பல தடவைகள் பேசியும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.