முல்லைத்தீவில் வீதி அபிவிருத்தியில் அதிருப்தியை வெளியிடும் மக்கள்
முல்லைத்தீவில் உள்ள வீதிகளில் ஒன்றாக தண்ணீரூற்று குமுழமுனை அளம்பில் வீதி காணப்படுகிறது.
நீண்ட காலமாக புனரமைக்கப்படாது இருந்த இந்த வீதியின் புனரமைப்பு பல தொடர்ச்சியான வேண்டுகைப் போராட்டங்களில் பலனாக காபைற் வீதியாக புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டிருக்கிறது.
தரமான வீதியமைப்புக்களை வடக்கில் மேற்கொண்டிருந்த ஒரு தனியார் ஒப்பந்த நிறுவனமே இந்த வீதியினையும் காபைற் வீதியாக புனரமைத்திருந்த போதும் வீதியின் புனரமைப்புப் பணிகள் இதுவரை முற்றுப் பெறவில்லை என மக்களிடையே அதிருப்தி நிலை தோன்றியிருப்பதனை அறிய முடிகின்றது.
புனரமைப்பொன்று முழுமை பெறும் போதுதான் அதன் பயனை உச்சளவில் மக்களால் பெற்றுக்கொள்ள முடிகின்றது.
முல்லைத்தீவு - மாங்குளம் வீதியினை முல்லைத்தீவு - திருகோணமலை வீதியுடன் இணைக்கும் பிரதான வீதியாக தண்ணீரூற்று குமுழமுனை அளம்பில் வீதி இருப்பதனை குறிப்பிடலாம்.
முடிந்து விட்ட வேலை ஒப்பந்த காலம்
தண்ணீரூற்று பொலிஸ் சந்தி என மக்களால் அழைக்கப்படும் மாங்குளம் முல்லைத்தீவு வீதியுடன் குமுழமுனை தண்ணீரூற்று வீதி இணையும் சந்தியில் இருந்து குமுழமுனை ஊடாக அளம்பில் சந்தி வரையான 13.73 கிலோமீற்றர் தூரத்தினை காபைற் வீதியாக புனரமைப்பதற்கான ஒப்பந்த காலம் 2020.01.01.அன்று முதல் 2021.12.31 வரையான இரண்டு வருடங்களாகும்.
பராமரிப்பு காலமாக 2021.12.31 முதல் 2025.01.01 வரையான மூன்று வருடங்களாக அமைய வேண்டும்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியணுசரனையுடன் இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இன்றைய நாளில் பணி ஒப்பந்த காலம் முடிவடைந்து பராமரிப்புக்கான காலம் ஆரம்பித்துள்ள போதும் புனரமைப்புப் பணிகளே இன்னும் முடிவடையவில்லை என மக்கள் குற்றஞ் சாட்டுவதும் குறிப்பிடத்தக்கது.
வீதியில் ஆபத்தை சுட்டும் எல்லைக் கற்கள் இல்லை
கணுக்கேணிக் குளத்தின் கீழ் உள்ள அதிக தடவை வெள்ளத்தால் பாதிப்படையும் தண்ணீரூற்று குமுழமுனை அளம்பில் வீதியின் 100 மீற்றர் நீளமான பகுதியை கொங்கிறீற்று பாதையாக அமைத்துள்ளனர்.
கொங்கிறீற்று வீதியின் இரு புறங்களிலும் மூன்றடி ஆழமான பள்ளங்கள் இருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
கொங்கிறீற்று பாதையின் விளிம்பு விபத்துக்களின் போது பாரியளவிலான காயங்களை ஏற்படுத்தி விடும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதனையும் அவதானிக்கலாம்.
இது தொடர்பில் வீதியபிவிருத்தியுடன் தொடர்புடைய பொறியியலாளர் ஒருவருடன் கலந்துரையாடிய போது வீதியின் விளிம்புப் பகுதியில் ஆபத்தினை உணர்த்தும் சிறிய எல்லைக் கற்களை நிறுவி அவை கட்புலனாகும் நிறம் பூசப்பட்டிருக்க வேண்டும்.
அப்போது தான் விபத்துக்களின் போது ஏற்படக்கூடிய சேதத்தின் அளவினை குறைக்க முடியும்.
வீதிகளில் பயன்படுத்தப்படும் கட்புலனாகும் நிறமாக வெள்ளை நிறம் அதிகமாக பயன்படுகின்றதனை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.
வீதியபிவிருத்தியின் போது வீதியின் கட்டமைப்புக்கள் சரிவர பூர்த்தி செய்யப்பட்டாலே வீதிப் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்கும் படி மக்களை ஊக்குவிக்க உதவும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
வீதிக் குறியீடுகளும் நிறக் கோடுகளும்
வீதியின் ஓரங்களில் இடப்படும் வெள்ளை நிறக் கோடுகள் தண்ணீரூற்றில் இருந்து முறிப்பு வரை தொடர்ச்சியாக இடப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து வீதியில் ஓரங்களில் வெற்ளைக் கோடுகளை தொடர்ச்சியாக அவதானிக்க முடியவில்லை.
பாடசாலைகளுக்கு முன்னுள்ள பகுதிகளில் பாதசாரிக் கடவைகளுக்கான மஞ்சள் (இப்போது வெள்ளை) கோடுகளும் வீதியின் ஓரக்கோடுகளும் குமுழமுனை பாடசாலை பகுதியில் உள்ளன.
இந்த வீதியில் முறிப்பு தமிழ் வித்தியாலயமும் குமுழமுனை மகாவித்தியாலயமும் அமைந்துள்ளதனை குறிப்பிடலாம்.குமுழமுனை மகாவித்தியாலயம்; வீதியின் ஓரமாகவே அமைந்துள்ளதுடன் அதிக மாணவர்களை கொண்டியங்கும் பாடசாலை என்பதும் அதன் முன்னே பாதசாரிக் கடவைகளுக்கான நிறக்கோடுகள் இடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனினும் குமுழமுனையில் இருந்து அளம்பிலுக்கு திரும்பும் பிரதான திருப்பத்தில் தண்ணிமுறிப்புக்கான பாதைத்திருப்பமும் சந்தித்துக்கொள்வதனால் அது முச்சந்தியில் அமைப்பினைப் பெற்றுள்ளது.
முன்னே முச்சந்தித் திருப்பம் இருப்பதனை குறித்து எச்சரிக்கும் " T " வீதிச் சமிக்கை பலகை இல்லை.வீதியின் ஓரங்களை எல்லைப்படுத்தும் நிறக்கோடுகளும் இல்லை.
தண்ணிரூற்று குமுழமுனை அளம்பில் வீதியின் குமுழமுனையூடாக செல்லும் பகுதியினை அதிகளவான மக்கள் பயன்படுத்தி வருகின்ற நிலையில்; வீதி புனரமைப்பின் போது இந்த வீதியின் மீதமிருக்கும் பணிகளை செய்து முடித்தலே செம்மையை ஏற்படுத்தும் என குமுழமுனை மக்களிடையே மேற்கொண்ட உரையாடல்களின் போது சிலர் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.
இந்த குறை வீதியின் மீதிப்பகுதி முழுவதும் நீண்டு தொடர்ந்து செல்வதையும் அவதானிக்கலாம்.
வெள்ளையடிக்காத பாலங்கள்
தண்ணீரூற்று குமுழமுனை அளம்பில் வீதியில் அமைக்கப்பட்டுள்ள பிரதான பாலங்கள் உள்ளிட்ட பெரும்பாலான பாலங்கள் வெள்ளை நிறப்பூச்சுக்களை பூசாது கட்டப்பட்டதோடு அப்படியே இருப்பதனையும் அவதானிக்க முடிகின்றது.
பாலங்கள் இருப்பதனை இலகுவாக புலப்படுத்துவதற்காக அவற்றுக்கு வெள்ளை நிறப் பூச்சுக்களை பூசி கட்புலனாவதை வலுப்படுத்துவதோடு; பாலம் பாதையின் நீளத்தோடு தொடர்புபடுத்தி இலக்கமிடப்பட்டு பெயரிடப்படுவதும் வழமையான செயற்பாடாக இருந்த போதும் இவை இங்கே இன்னமும் செய்து முடிக்கப்படவில்லை என சமூகவிடய ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டுகின்றார்.
பாதையின் தூரத்தைக் குறிக்கும் கிலோமீற்றர் கல்லும் இதுவரை நடப்படவில்லை. இதனால் வீதியில் பயணிப்போருக்கு தூரத்தினை அறிவதிலும் வீதியின் தரப்படுத்தல் வகையை (பெயரை) அறிவதிலும் சிரமத்தை ஏற்படுத்தி விடுவதாக இது அமைந்துள்ளது.
வீதியில் உள்ள கிலோமீற்றர் கல்லில் வீதியின் பெயரும் கிலோமீற்றரும் குறிக்கப்பட்டிருக்கும் என்பதும் நோக்கத்தக்கது.
கிலோமீற்றர் கட்டை நடப்பட்ட பின்பே பாலங்களை பெயரிடுவது பொருத்தப்பாடானதாக இருக்கும் என்பது செயல்வழி அனுபவம்.
ஒப்பந்த காலத்தினை கடந்த போதும் முடியாத வேலைகள்
வன்னியில் பல வேலைத்திட்டங்கள் அவற்றுக்கான ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும் உடன்பாடெய்திய பணிகள் முடிக்கப்படாது இருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
துறை சார் அரசு அதிகாரிகளோ அல்லது அப்பகுதி மக்கள் பிரதிநிதிகளோ இது தொடர்பில் அக்கறையின்றி இருப்பதனையும் அவதானிக்க முடிகின்றது.
மங்களிடையே இது தொடர்பில் மேற்கொண்ட ஆய்வில் பலர் இந்த விடயங்களை புரிந்து கொள்ளவே முடியாதவர்களாக இருப்பதனையும் குறிப்பிட்ட சிலரே விடயங்களை புரிந்து கொண்டு இருப்பதனையும் அவதானிக்க முடிகின்றது.
எனினும் பணிகள் முடிவுறுத்தப்படுதலுக்கான அழுத்தங்களை உரிய தரப்புக்களுக்கு ஏற்படுத்தும் விடயத்தில் அவர்கள் பாரா முகமாகவே இருப்பதனையும் அறியமுடிந்தது.
நாட்டில் உள்ள பொருளாதார நெருக்கடி ஒரு காரணமாக இருக்கலாம்.கூலி மற்றும் பொருட்களின் கட்டுப்பாடற்ற விலையேற்றம் ஒப்பந்த தொகையில் பணிகளுக்கான பணப்பற்றாக்குறையை ஏற்படுத்தும்.
பற்றாக்குறை காரணமாக பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க போதியளவு நிதி இல்லாது போயிருக்கலாம். அப்படியிருந்தால் குறைதீர்ப்பு நிதியீட்டம் மூலம் அந்தப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து முடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
எனினும் இது தொடர்பிலான தகவல்களை பெற உரிய தரப்பினர்களுடன் தொடர்பு கொள்ள எடுத்த முயற்சிகள் திருப்திகரமான பலனளிப்புக்களை தரவில்லை.
பிரதேச அபிவிருத்தி கூட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் போக்கினை அவதானிக்க முடிகின்றது.அந்த கூட்டங்களில் முடிக்கப்படாத வேலைகள் தொடர்பிலும் கவனமெடுத்தல் வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri

ஈரானின் எச்சரிக்கை., B-2 பாம்பர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா - புதிய கட்டத்திற்கு செல்லும் மோதல் News Lankasri

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri
