முல்லைத்தீவு மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்து கொடுக்கப்படாமையால் மக்கள் அவதி
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்து கொடுக்கப்படாமை தொடர்பில் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மழைக்காலங்களில் பெரும் சிரமங்களையும், ஆபத்துக்களையும் எதிர்கொள்ளும் வசந்த நகர் மக்கள் பல இன்னல்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வசந்த நகர் மக்களே இவ்வாறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
நீரோடை போன்று காட்சியளிக்கும் குறித்த வீதியைப் பயன்படுத்தியே மக்கள் அன்றாட போக்குவரத்துக்களை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குச் சொந்தமான குறித்த வீதியைப் புனரமைத்துத் தருமாறு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டோருக்கும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளருக்கும் பல்வேறு தடவை கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் தமக்கு தீர்வு வழங்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நியூட்டன் வீதி என அழைக்கப்படும் குறித்த வீதியை வசந்தனகர், இந்துபுரம், சாந்தபுரம் உள்ளிட்ட பகுதி மக்கள் அன்றாடம் பயன்படுத்தி வருவதுடன், ஏ9வீதியையும் கிராமத்தையும் இணைக்கும் பிரதான வீதியாகவும் காணப்படுகின்றது.
குறித்த வீதியில் காணப்படும் பாலம் ஆபத்தான பாலமாகக் காணப்படுவதாகவும், அதன் ஊடாக பயணிப்பதில் பெரும் ஆபத்தான நிலை காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், பாடசாலை மாணவர்களும் அவலங்களைச் சந்திப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுவதுடன், குறித்த வீதியை முன்னிலைப்படுத்தி அபிவிருத்தியை மேற்கொள்ளவேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
தமது பிரதேசத்திற்குப் பெருந்தெருக்கள் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட வீதி மக்கள் பயன்பாடு குறைந்த பகுதியில் அபிவிருத்தி செய்யப்படுவதாகவும், சில அரசியல் நோக்கங்களிற்காக அவ்வாறு பிரதேச செயலகத்தினால் அடையாளம் காட்டப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த வீதியின் முக்கியத்துவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட அனைவரினதும் கவனத்திற்குக் கொண்டு சென்ற போதிலும் இன்றுவரை அதற்கான தீர்வு கிடைக்கவில்லை என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.







