மக்கள் சமூக பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் - வே.கமலநாதன்
கோவிட் பெருந்தொற்றிலிருந்து எம்மை பாதுகாக்க அனைவரும் சமூக பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வே.கமலநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களைச் சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
கோவிட் தொற்று தற்போது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அத்தோடு அதனால் ஏற்படுகின்ற கோவிட் மரணங்களும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த நேரத்தில் நாமும் எமது மக்களும் சமூக பொறுப்புணர்வோடு கோவிட் தொற்றிலிருந்து எம்மை பாதுகாப்பதற்கு நாங்கள் முயற்சிக்க வேண்டும். இப்பொழுது கோவிட் தொற்று அதிகரித்துச் செல்கின்ற வேளையிலே முதலாவது பிரதானமாக எங்களுடைய மக்கள் சுகாதார விதிமுறைகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
அத்தோடு உங்களுக்கு இருமல், தடிமல், காய்ச்சல், தொண்டை, நோ போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்ற போது ஏனையவர்களிடமிருந்து உங்களை நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள். அத்தோடு வைத்தியசாலையினுடைய உதவியை நாட வேண்டும், வைத்தியசாலைக்கு வருவதற்கு எந்தவிதமான தயக்கமும் தேவை இல்லை, எவ்விதமான பயமும் கொள்ளத் தேவை இல்லை.
உங்களுக்கு இப்படியான அறிகுறிகள் காணப்படின் வைத்தியசாலையின் உதவியை நாடி அதற்குரிய சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள முடியும். மருத்துவமனைக்கு வருகின்ற போது எங்களுடைய சுகாதார உத்தியோகத்தர்கள் கோவிட் பெருந்தொற்று காலத்திலே தொற்றினை தடுப்பதற்கும் தொற்றினால் ஏற்படுகின்ற உயிர் இழப்புக்களைத் தடுப்பதற்கும் போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.
அந்த வேளையிலே உங்களுடைய நோய் வரலாற்று உண்மைத் தன்மையை வெளிப்படுத்தி எங்களுடைய சுகாதார உத்தியோகத்தர்களிடம் அந்த தொற்றினால் ஏற்படுகின்ற அபாயத்தைத் தவிர்ப்பதிலே நீங்கள் உண்மையிலே பங்களிக்க வேண்டும்.
இவ்வாறு மக்கள் நாம் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்வோமேயானால் முன் களத்திலே நின்று போராடிக் கொண்டிருக்கின்ற எங்களுடைய சுகாதார உத்தியோகத்தர்களுடன் இணைந்து நாமும் இந்த கோவிட் தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும். கடந்த 16 ம் திகதி மே மாதம் எங்களுடைய பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலே கோவிட் தொற்று சிகிச்சைக்கான விடுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதுவரையிலே எமது விடுதியில் 556 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். விடுதியிலும் வெளிநோயாளர் பிரிவிலும் சேர்த்து 41 நோயாளர்கள் இதுவரையில் இறந்திருக்கிறார்கள். இந்த மரணங்கள் ஆகஸ்ட் மாதத்திலேதான் அதிகரித்திருக்கின்றன. ஆறு உடல்களே வைக்கக்கூடிய வசதியே உள்ளன.
ஆனால் தற்போது 11 சடலங்கள் உள்ளன. எனினும் நெருக்கடி நிலை கருதி பன்னிரண்டு சடலங்களை வைத்திருக்க முடியும். மேலதிகமாக இறந்த உடல்கள் வருகின்ற போது கடும் நெருக்கடிகளைச் சந்திக்கவேண்டி ஏற்படும். மாகாண சுகாதார திணைக்களம் இறந்த உடல்களை மாகாணத்திற்கு வெளியிலே கொண்டு சென்று அடக்கம் செய்யும் ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.
இதே வேளை வடமராட்சி- பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மரணம் அடையும் கோவிட் தொற்றாளர்களது உடலங்களைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதியினை தியாகி அறக்கொடை நிறுவுனர் தியாகேந்திரன் இன்றிலிருந்து இலவசமாகப் பொறுப்பேற்றிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.