மேலதிக பணத்தை பெற்ற அரச வங்கியொன்றின் வாடிக்கையாளர்கள் - பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு
நாணய மாற்று வீதத்தில் ஏற்பட்ட தவறு தொடர்பில் மக்கள் வங்கி விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி குறிப்பிட்டதொரு பணப்பரிமாற்றக் கட்டமைப்பில் நாணயமொன்றிற்குப் பிரயோகிக்கப்பட்ட நாணய மாற்று வீதத்தில் ஏற்பட்ட தவறு மற்றும் அதன் மூலம் வாடிக்கையாளர்கள் சிலர் மேலதிகப் பணத்தைப் பெற்றுக்கொண்டமை தொடர்பாக மக்கள் வங்கி அதிகாரப்பூர்வ விளக்க அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இந்தத் தவறுதலான பணப்பரிமாற்றங்கள் கடந்த 2023 மே மாதம் முதல் 2026 மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கான அறிவிப்பு
இதன் காரணமாக குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்கள் குறித்த தொகைக்கு மேற்பட்ட பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளமை அண்மையில் கண்டறியப்பட்டு, அதன் பின்னர் அது முழுமையாகச் சரிசெய்யப்பட்டு விட்டதாக மக்கள் வங்கி பொதுமக்களுக்கு அறியத்தந்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில் மேலும், இந்தத் தவறு கண்டறியப்பட்ட உடனேயே வங்கி முழுமையான உள்ளக மீளாய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன், உரிய செயற்பாட்டுக் கட்டுப்பாடுகளை வலுப்படுத்தியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி உட்பட உரிய ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை அதிகாரத் தரப்புக்களின் ஆலோசனையின் கீழ் இவ்விடயத்தை வங்கி தற்போது மீளாய்வு செய்து வருகின்றது.
நிதிரீதியான இழப்பு
இவ்விடயத்தால் ஏற்பட்டுள்ள நிதிரீதியான இழப்பு சுமார் ரூபா 656 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தொகையை வங்கி ஏற்கனவே குறிப்பிட்ட காலப்பகுதிக்கான தனது நிதி அறிக்கைகளில் முழுமையாக உள்வாங்கியுள்ளது.
தற்போதைய மதிப்பீடுகளின் அடிப்படையில், மேலதிக நிதி இழப்பீடு எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் அந்த இழப்பினை மீட்கும் நடைமுறைகளை வங்கி ஏற்கனவே ஆரம்பித்துள்ளதுடன், குறித்த வாடிக்கையாளர்களிடமிருந்து அதனை மீளப்பெறும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
வங்கியின் அன்றாடச் செயற்பாடுகள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் எவ்விதமான தங்குதடையுமின்றி வழக்கம் போல் இடம்பெற்று வருகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.