ஆந்தல் ஓயா அணைக்கட்டை உடன் புனரமைப்பு செய்து தருமாறு மக்கள் வேண்டுகோள்
ஆந்தல் ஓயா அணைக்கட்டை உடன் புனரமைப்பு செய்து தருமாறு அப்பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அம்பாறை நீர்பாசன பொறியியலாளர் அலுவலகத்தின் பராமரிப்பின் கீழ் அமைந்துள்ள ஆந்தல் ஓயா அணைக்கட்டு கடந்த வருடம் ஏற்பட்ட பெரு மழை வெள்ளத்தில் உடைப்பெடுத்துள்ளது.
அது இதுவரையில் புணரமைப்புச் செய்யாமையால் அந்த அணைக்கட்டை பிரதான வீதியாக பயன்படுத்திவரும் மக்களும், அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளும், பெரும் இன்னல்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,
அக்குறித்த ஆந்தல் ஓயா ஆற்றின் அணைக்கட்டின் ஒருபகுதி உடைந்து சேதமடைந்துள்ளமையால் அதனை றாணமடு கிராமத்திற்கும் பூச்சிக்கூடு எனும் கிராமத்திற்குமான பிரதான வீதியாகப் பயன்படுத்திவரும் அப்பகுதி மக்கள் போக்குவரத்துச் செய்ய முடியாத நிலைமைக்கும் கடந்த ஒரு வருடமாகத் தள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
றாணமடு பூச்சுக்கூடு பிரதான வீதியின் ஆந்தல் ஓயாவின் அணைக்கட்டு வருடாந்தம் மாரி மழை வெள்ளத்தில் சேதமடைவதுடன், தற்போது அணைக்கட்டின் ஒரு பகுதிக்கு முற்றாக சேதமேற்பட்டுள்ளது.
அப்பகுதியில் தற்போது பெரும்போக வேளாண்மை செய்கையில் ஈடுபடவுள்ள நிலையில் குறித்த அணைக்கட்டு முழுமையாக உடைப்பெடுத்தால் தமது விவசாய செய்கை முற்றாக பாதிக்கப்பட்டுவிடும் இதனால் அப்பகுதியில் அமைந்துள்ள 500 இற்கு மேற்பட்ட ஏக்கர் நெல் வயல்கள் பாதிப்படைந்துவிடும், என அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
பாடசாலை நேரங்களில் மாணவர்கள் பெரும் சிரமத்தினை எதிர்நோக்குவதாகவும் போக்குவரத்து செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் கூறும் அங்குள்ள மக்கள் இவ்வருடம் மாரிமழை வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் குறித்த அணைக்கட்டை செப்பணிட்டு விவசாயத்திற்கும், போக்குவரத்திற்கும் வழிசமைத்துத்தர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடன் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.