பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக பாலமுனையில் மக்கள் பேரணி
இஸ்ரேல் தாக்குதலில் பாதிக்கப்பட்டு வரும் பலஸ்தீன் - காஸா மக்களுக்கு ஆதரவாகப் பாலமுனை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த உணர்வுப் பேரணி நேற்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது.
பாலமுனை ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் முன்றலில் ஆரம்பமான இந்தப் பேரணி பிரதான வீதியை வந்தடைந்தது.
மக்கள் பேரணி
இதன்போது, பல்வேறு சுலோகங்களை ஏந்தியவாறு கூடுதலான மக்கள் கலந்துகொண்டதுடன் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் காட்டுமிராண்டித்தனத்தையும் எச்சரித்தனர்.

இதன்போது, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் உப தலைவரும் அம்பாறை மாவட்டத் தலைவருமான ஐ.எல்.எம்.காஸீம் சூரி மற்றும் தென் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஏ.எச்.றிபாஸ் ஆகியோர பலஸ்தீன காஸா மக்களின் பாதிப்பு தொடர்பில் விசேட உரையை நிகழ்த்தியதுடன் இஸ்ரேல் நாட்டின் கொலைகார வெறித்தனத்தையும் கண்டித்துப் பேசினர். அத்தோடு விசேட துஆப் பிரார்த்தனையை மௌலவி ஹூஸைன் அவர்கள் நிகழ்த்தினார்.
பெருந்திரளான பாலமுனை மக்கள் பங்கேற்ற இந்தப் பேரணியில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, உதவித் தவிசாளர் எப்.எம்.நாஜீத், பிரதேச சபை உறுப்பினர் ஐ.ஏ.சிராஜ் உட்பட உலமாக்கள் பலரும் கலந்துகொண்டனர். பாலமுனைப் பிரதேசத்தின் சகல நிறுவனங்கள், அமைப்புக்களை ஒன்றிணைத்ததாக பாலமுனை இளைஞர்கள் அமைப்பு இந்தப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர்.











