குழந்தையின் சடலத்துடன் வீதிக்கு இறங்கிய மக்கள்
ஹட்டன் - ஷெனன் பகுதியில் தோட்ட நிர்வாகத்தின் பொறுப்பின்மையினால் 14 மாத ஆண் குழந்தையொன்று உயிரிழந்ததாகக் கூறி ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உயிரிழந்த குழந்தையின் சடலத்துடன் நேற்று (16) மாலை பொது மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர்.
போக்குவரத்து உதவி
குறித்த பகுதியைச் சேர்ந்த இந்த 14 மாத குழந்தை கடந்த 15ஆம் திடீர் உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டதையடுத்து, குழந்தையைத் தோட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது, அங்கு வைத்தியர் இல்லாதமையினால், குழந்தையை டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்குத் தோட்ட நிர்வாகத்திடம் போக்குவரத்து உதவி கோரப்பட்டது.
எனினும், ஓட்டுநர் இல்லாமையினால் வாகனமொன்றை வழங்குவதற்குத் தோட்ட நிர்வாகம் மறுத்ததால், தனியார் வாகனமொன்றில் குழந்தை டிக்கோயா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் முன்னதாகவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்
இந்தநிலையில், தோட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தின் விளைவாகவே, இந்த மரணம் சம்பவித்ததாகக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, ஷெனன் தோட்ட மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
குழந்தையின் பிரேதப் பரிசோதனை டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்ட நிலையில் பால் புரைக்கேறி மூச்சுத் திணறியமையினாலேயே குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து, தோட்ட நிர்வாகத்திடம் விசாரிக்க முயன்றபோதிலும், அந்த முயற்சி பலனளிக்கவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |