மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் முன்பு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மக்கள் (Photos)
முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட வன்னிவிலன்குலம் மக்கள், தமது காணிகளுக்கான முதல்தர ஆவணத்தை தருமாறு கோரி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் (23.10.2023) மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் முன்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாண்டியன்குளம் சந்தியிலிருந்து பேரணியாக புறப்பட்ட கிராம மக்கள் பிரதேச செயலக வாசலில் நின்றவாறு கோசங்களை எழுப்பியுள்ளனர்.
இதன்போது கடந்த 2014ம் ஆண்டு மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தால் துவரங்குளம் வயல் காணிக்கு வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தை உறுதிப்படுத்தி (முதல் பிரதியை) எமக்குத் தாருங்கள் எனவும், இதுவரை காலமும் பிரதேச செயலகத்தால் அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகவும், மாகாண காணி ஆணையாளர் வழங்குமாறு தெரிவித்தும் பிரதேச செயலகம் வழங்க முன் வரவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், விநோதரலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களான ரவிகரன், சிவமோகன் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேசசபையின் முன்னால் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் உதவி பிரதேச செயலாளரிடம் மகஜரும் பிரதேச மக்களால் கையளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று பிரச்சினைக்கான தீர்வினை பெற்று தருவதாக கூறியதை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.









