மக்களின் வாழ்வாதார தேவைக்குரிய காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஆராயும் சிறப்பு கலந்துரையாடல் (Photos)
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களங்களின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளில் மக்களின் வாழ்வாதார தேவைக்குரிய காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஆராயும் சிறப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இக் கலந்துரையாடலானது யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (5) இடம்பெற்றுள்ளது.
இதன்போது இத் திணைக்களங்களால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளினால் யாழ், கிளிநொச்சி மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந் நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்ததாவது,
பாரம்பரியமாக கடற்றொழில் மற்றும் விவசாயம் மேற்கொள்ளப்பட்ட காணிகளில் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்வதை யாரும் தடை செய்ய முடியாது.
இதேநேரம் வன ஜீவராசிகள் அல்லது வனப் பாதுகாப்பு திணைக்களங்களினால் அவசியம் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களில் குறித்த பாரம்பரிய விவசாய நிலங்களும் மீன்பிடி நிலைகளும் காணப்படுமாயின் சம்ந்தப்பட்ட திணைக்களங்களின் அனுமதியைப் பெற்று தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், குறித்த பகுதிகளில் கடற்றொழில் நடவடிக்கைகளை
மக்கள் மேற்கொள்ள முடியாமற்போகும் நிலை காணப்பட்டால் அது தொடர்பில் அனுமதிகள்
மற்றும் சட்டரீதியான தேவைப்பாடுகளை குறித்த பிரதேச செயலரூடாக மேற்கொண்டு தொழில்
நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
அதேநேரம் இத்தகைய பகுதிகளில் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள செல்லும் போது வீதிகள் குறித்த அசௌகரியங்கள் இருக்குமானாலும் அவற்றையும் இனங்கண்டு பிரதேச செயலர் தமக்கு தகவல்களை வழங்கவேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முன்பதாக வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களங்களின் இலக்குகளையும் மக்களின் வாழ்வியல் எதிர்பார்ப்புக்களையும் ஒன்றிணைக்கும் வகையில் சமந்தப்பட்ட அமைச்சினால் நாடளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தப்படவுள்ள 'வனக் கிராம்' எனும் திட்டத்தினை மருதங்கேணி, மணற்காடு பிரதேசத்தில் இருந்து ஆரம்பிக்க முடியும் என்று அமைச்சர் சீ.பீ. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த கிராமத்திற்கான உட்கட்டமைப்பு வசதிகளையும் அத்தியாவசிய மற்றும் அடிப்படை தேவைகளையும் உருவாக்குவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் சீ.பீ. ரத்நாயக்க , யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் , கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , வட மாகாண பிரதம செயலாளர் S.M சமன் பந்துலசேன, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) முரளி, பிரதேச செயலாளர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




